சுன்னாகத்தில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு : பொலிஸார் அசமந்தம்! – குற்றம் சுமத்துகின்றனர் பொதுமக்கள்!!
Wednesday, October 5th, 2016
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக மீண்டும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் குற்றவியல் பொலிஸார் அதனை கட்டுப்படுத்த தவறுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை இனங்காட்டினாலும் அவர்களை கைது செய்வதில் பொலிஸார் அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் 3வீடுகள் உடைப்பு சம்பவங்கள், வழிப்பறி கொள்ளை மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலக தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் தற்போது நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது. இதன் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்களும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் அசமந்த போக்குடன் செயற்பட்டு வருவதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 3 வருடங்களாக கடமையாற்றிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அப்பதவிக்கு தமிழர் இருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் சுன்னாகம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. அத்துடன் நேற்று முன்தினம் ஏழாலை பகுதியிலுள்ள உடற்பயிற்சி நிலையத்தில் திருட்டு ஒன்று இடம்பெற்றுள்ளதுடன் அதே இடத்தில் உள்ள இன்னொரு வீட்டின் கதவு ரௌடிகளினால் கொத்தி சேதமாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|