பலாலி விமான சேவைகள் இம்மாத இறுதியில் ஆரம்பம் – நாடாளுமன்றில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Thursday, October 20th, 2022

பலாலி விமான நிலையத்தின் விமான சேவைகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்..

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் விரைவாக ஆரம்பிக்கப்படுமென்பதை  தெரிவித்த அமைச்சர், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அது முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற,வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது, எதிர்க்கட்சி எம் .பி புத்திக பத்திரண எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்டபுத்திக பத்திரண தமது கேள்வியின் போது –

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் நாட்டுக்கு மிகவும் முக்கியமான விமான நிலையமாகும். அதனை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடருமா? அதற்கான நிதியை தேடுவதற்கான திட்டங்கள் உள்ளனவா? என்றும் கேள்வி எழுப்பினார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா –

பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்தியுள்ளோம். அதற்கு தேவையான சான்றுகளை விமான சேவைகள் அதிகார சபையினூடாக பெற்றுக்கொண்டோம்.

பின்னர் இந்தியாவின் விமான சேவைகள் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தோம். ஏற்கனவே அந்த விமான சேவை நிறுவனத்தினர் அதற்கு இணங்கியிருந்தனர். எனினும் பலாலி விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் அங்கு விமானம் வருகை தரவில்லை.

அது அவர்கள் பக்க தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளாக இருக்கலாம். அது தொடர்பான நடவடிக்கைகள் பின்தங்கியுள்ளன. எவ்வாறாயினும் இந்த மாத இறுதியில் விமானங்கள் சில வரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

முடிந்தளவு அந்த விமான சேவை மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கு எதிர்பார்க்கின்றோம். அதேவேளை, இந்திய அரசாங்கத்தினால் இந்த விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக நிதி வழங்கப்பட்டுள்ளது.

அதனை பயன்படுத்தி ஓடுபாதையை நீடிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அங்கு பெரிய விமானங்கள் வரக் கூடிய வகையில் ஓடுபாதையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: