ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கிய துரித மாற்றத்தையே எதிர்பார்க்கிறோம் – அரச நிதி நிர்வாகத்திற்கும் புதிய சட்டமூலம் – பொருளாதாரத்தின் பயன் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்து!

Wednesday, March 20th, 2024

இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை கடனாகப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி விரைவில் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.. 

இதேவேளை இவற்றுக்குத் தேவையான சட்டத்தை ஏப்ரல் மாதமளவில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், அரசாங்கத்தின் நிதி நிர்வாகம் தொடர்பிலான புதிய சட்டமூலமும் அதனுடன் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் தெரிவித்துள்ளார்..

கேகாலை மங்கெதர டெம்பிடி புராதன பிரிவெனா விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட தங்க வேலியை  இன்று (20) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். .

இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில் – இலங்கை கடனைச் செலுத்தக்கூடிய நாடு என்பதை மீள உறுதிப்படுத்துவதற்கு அவசியமான பேச்சுவார்த்தைகளை ஜூன், ஜூலை மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும், அதன் பின்னர் இதுவரையில் எமக்கு கிடைக்காமலிருக்கும் வௌிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அது மட்டுமன்றி, இலங்கையுடன் வர்த்தகம் செய்வதிலிருந்து விலகியிருந்த வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மீண்டும் கொடுக்கல் வாங்கல் செய்ய ஆரம்பிக்கும் என்றும் அதனால் நாட்டில் வெளிநாட்டுக் கையிருப்பு அதிகரித்து, நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் என்றும், அதனூடாக மக்களுக்கு மேலும் பல சலுகைகளை வழங்க முடியுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த நாட்களில் நாடு எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அதன் பின்னர் கட்டியெழுப்படும் பொருளாதாரத்தின் பிரதிபலன்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் நாம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை கடந்து வந்த போது அதிலிருந்து மீள்வதற்கு கடினமான பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த நிலையிலிருந்து மீண்டு நிவாரணங்களை வழங்கக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது. 

தற்போதும் ரூபாவின் பெறுமதி வலுவடைந்திருக்கும் நிலையில் ஜூன் மாதமளவில் டொலரின் பெறுமதி 280 ரூபாவரை வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பொருட்களின் விலை குறைவடையும். அடுத்த வருடத்தில் ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடையுமென எதிர்பார்க்கிறோம்.

வரவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும். அத்துடன் அஸ்வெசம வேலைத்திட்டத்தின் மூலம் சமுர்தித் திட்டத்தைப் போன்று மூன்று மடங்கு நன்மைகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயனாளி குடும்பங்களின் எண்ணிக்கை பதினெட்டு இலட்சத்தில் இருந்து இருபத்தி நான்கு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இப்படிப் பார்க்கும் போது, சிறந்த பொருளாதார நிலை இருந்தபோது கொடுத்த நிவாரணத்தை விட, வங்குரோத்தடைந்த  நாடாக மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம், மூன்று மடங்கு அதிகம் என்பது தெளிவாகிறது. இந்த அனைத்து நடவடிக்கைகளின் இறுதி நன்மை நாட்டின் பொருளாதாரத்திற்கே கிடைக்கிறது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி பயன்படுத்தப்படவில்லை. இப்போது நாம் அந்தத் தொகையையும் வழங்கியுள்ளதோடு அதுவும் இறுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் சேரும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: