எல்லை தாண்டும் இந்திய மீனவர் விவகாரம் – தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் – வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக அறிவிப்பு!

Saturday, January 8th, 2022

இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கிறோம் என வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக தெரிவித்தன.

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்துடன் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்துடன் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டது.

இது தொடர்பில் இரண்டு மீனவ அமைப்புகளும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் –

அத்துமீறிய இந்திய இழுவைப் படகுகளின் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் காரணமாக வடபகுதி மீனவர்களின் கடல் வளமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

2500 இந்திய இழுவைப் படகுகளை தடை செய்து இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தலைநகர் கொழும்பில் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம். அத்துடன் அகில இலங்கை ரீதியாக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாகவும் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எட்டப்படும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியவாறு நாம் போராட்டத்தை கைவிட்டிருந்தோம். ஆனால் இந்திய மீனவர்கள் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. வடமராட்சிப் பகுதியில் மீண்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்றுள்ளது. இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: