எரிபொருள் நாட்டுக்கு வரும் வரை வரிசையில் காத்திராதீர்கள் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் வேண்டுகோள்!

Monday, June 20th, 2022

எரிபொருள் தொகை நாட்டுக்கு வரும் வரை, அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்காக 90 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான கடன் பத்திரம் திறக்கப்பட்டுள்ளது.

ஜூன் 23 ஆம் திகதி பெற்றோல் தொகை நாட்டிற்கு வரும், ஜூன் 24 ஆம் திகதி டீசல் தொகை நாட்டிற்கு வரவுள்ளது. எனவே, எரிபொருள் தொகை வரும் வரை, அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியார் பேருந்துகளுக்கு தேவையான எரிபொருளை இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களின் ஊடாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே தனியார் பேருந்து நடத்துனர்கள் மற்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் பாடசாலை போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களும் தமக்கு தேவையான எரிபொருளை அருகில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அது தவிர அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருளை தெரிவு செய்யப்பட்ட நிரப்பு நிலையங்களில் இருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமைமுதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: