எமது நாடு போல் நல்ல நாடு இந்த உலகில் இல்லை – வடக்கு ஆளுநர்!

Monday, November 21st, 2016

உலகிலே மிகவும் பழமை வாய்ந்த சமயமாக இந்து மதம் காணப்படுகிறது. அதன் பின்னரே பௌத்த மதம் உருவாகியது என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, தெரிவித்துள்ளார்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாட்டின் மூன்றாம் நாள் மாலை நேர நிகழ்வு நேற்றைய தினம் நல்லூர் ஸ்ரீ துர்க்கா தேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

முற்காலத்தில் மக்களின் சுதந்திரத்துக்காக அப்போது அரசியல்வாதிகளை விட சமய மத தலைவர்கள் தான் கடுமையாக வேலை செய்தார்கள். பௌத்தத்துக்கு அனகாரிக தர்மபால, இஸ்லாத்துக்கு சித்தி லெப்பை, சைவத்துக்கு ஆறுமுகநாவலர் போன்றோர் மிக கடுமையாக உழைத்தார்கள்.

ஆறு முகநாவலர் கடுமையான சேவை செய்த காரணத்தால் தான் தமிழ் கலாசாரம் காப்பாற்றப்பட்டது. இன்னுமொரு விடயம் என்னவெனில் இன்று பலர் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு இங்கு தனியாக இருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் அனைத்து இனம் மதத்துடன் கலந்துள்ளார்கள்.

பல லட்சம் செலவுகள் செய்து வளர்த்த பிள்ளைகள் வீட்டிலும் இல்லை, ஊரிலும் இல்லை, வெளிநாட்டுக்கு போய் சேவை செய்து அங்கேயே செத்துப் போகிறார்கள். நாம் எங்கு போனாலும் எமது சமயம் மொழிக்கு கௌரவம் கொடுக்க வேண்டும். எனினும் எல்லா சமயமும் நல்லதை தான் சொல்லி இருக்கிறார்கள்.

இந்து சமயமும் பௌத்த சமயமும் சகோதரம் போலானவை. இந்த உலகத்தின் மிகப் பழமை வாய்ந்த சமயம் இந்து மதம். அதன் பின்னர் பௌத்தம் பின்னர் கிறிஸ்தவம் அதன் பின்னர் இஸ்லாம் மதம் எனப் பல உருவாகின.

அந்த வகையில் பௌத்த சமயமும் இந்து சமயமும் ஒரே மாதிரிதான் உள்ளது. விகாரைகள் உள்ளே இந்து கடவுள்கள் உள்ளது. தெய்வங்கள் அனைத்தும் ஒற்றுமையாக உள்ளார்கள் சமாதானமாக உள்ளார்கள் அதை வணங்குவதற்கு செல்பவர்கள் தான் சண்டைபிடிக்கிறார்கள்.

வைத்தியசாலைக்கு சென்று தமிழ், சிங்களம் இரத்தம் வேண்டாம் என்று சொல்ல முடியாது. சுத்த இரத்தம் என்பது பொய் எல்லாரும் மனிதர்கள் தான். வடமாகாண முதலமைச்சர் தனது பிள்ளைகளை பௌத்த மதத்தினருக்கு திருமணம் முடித்துள்ளார். அதேபோல நடேசன் நிருபமா ராஜபக்ஷவை திருமணம் முடித்துள்ளார்.

நிருபாமா முன்னைய ஜனாதிபதி மகிந்தவின் சகோதரி. அப்படியானல் மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் மச்சான் தானே ஏன் சண்டை போடுகிறீர்கள். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நம்பிக்கை எமது மனதில் இருக்க வேண்டும். எமது நாடு போல் நல்ல நாடு இந்த உலகில் இல்லை.

அனைத்து குற்றங்களையும் செய்வது அரசியல்வாதிகள் தான். மக்கள் அனைவரும் மிகவும் அருமையான நல்ல மனிதர்கள். எனவே அனைவரும் ஒன்றிணைந்து எமது நாட்டை கட்டிஎழுப்ப வேணடும் என அவர் மேலும் தெரிவித்தார். .

 Reginald-Cooray

Related posts:


தென்னிலங்கையில் பெரும் பரபரப்பு: தீவிர பாதுகாப்பில் நாடாளுமன்றம் - வெற்றிபெறுவாரா பிரதமர் ரணில்!
நாட்டில் பராமரிப்பை இழந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முதியோர் இல்லங்களில் - தேசிய முதியோர் செயல...
அஸ்வெசும நலன்புரி திட்டம் - பயனாளிகளுக்கு இதுவரை 5 ஆயிரத்து 196 கோடி 70 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ள...