எந்த ஒரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களே இதுவரை கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர் – சுகாதார அமைச்சர் பவித்ரா சுட்டிக்காட்டு!

Friday, July 23rd, 2021

எந்த ஒரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களே இதுவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டும் கொரோனா தொற்றின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் தம்மையும் பிறரையும் பாதுகாக்க அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் போதியளவு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் மேலும் தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கவுள்ளதாகவும் அனைவருக்கும் தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் சாத்தியமாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வருகை தரும் மக்களின் எண்ணிக்கை சில தினங்களாக குறைவடைந்து காணப்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர், மக்களின் வருகை மந்தமாக காணப்படுவதாக சுகாதாரத்துறையினர் தமக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்பவர்கள் எந்த ஒரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் என தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

அந்த நிலையில் மக்களின் உயிர்களை பாதுகாப்பதே அரசாங்கத்தின் ஒரே நோக்கம். 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் நோய்களோடு வாழ்பவர்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியம் என்றும் அதன் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் பிறரை பாதுகாக்கவும் முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts: