எத்தகைய விமர்சனங்கள் எழுந்தாலும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்படும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, November 27th, 2021

உலகளாவிய ரீதியில் பொருளாதாரச் சவால்களை வெற்றிகொண்டு நாட்டை முன்னேற்றுவதற்காக, எதிர்காலங்களில் பல்வேறு தீர்மானங்களை எடுக்க வேண்டி இருக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இத்தகைய தீர்மானங்கள் விமர்சனங்களுக்கு உள்ளானாலும், எதிர் காலங்களில் அதன் பிரதிபலன்கள் நாட்டுக்கும், மக்களுக்கும் கிடைக்குமென்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ‘ஜனாதிபதி ஏற்றுமதி விருது’ விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் குறுகியகால சிக்கல்களை வெற்றிகொண்டதன் பின்னர் பொருளாதார நிவாரணங்களை வழங்க முடிவதோடு, நாட்டைப்பற்றி சிந்தித்து புரிந்துணர்வுடன் செயற்படுமாறு தாம் அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய உயர் மற்றும் தனித்துவமான விருது இதுவாகும்.

ஏற்றுமதித்துறையின் வளர்ச்சிக்காக உயரிய பங்களிப்பை வழங்கிய ஏற்றுமதியாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த வருடத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு சில இறக்குமதி கட்டுப்பாடுகள் போன்ற கொள்கை ரீதியான தலையீடுகளின் அனுகூலங்களை இன்று இந்நாடு அனுபவிக்கின்றது. அதன்மூலம் புதிய உள்நாட்டு கைத்தொழில் அபிவிருத்திக்கு வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன.

இந்த புதிய கைத்தொழில்களை போஷித்து, குறுகியகால இலாபம் ஈட்டுவதற்கு பதிலாக உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடிய தரமான உற்பத்திகளை உருவாக்குவதற்கு கைத்தொழிலாளர்கள் செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதற்காக இலங்கையில் தனித்துவமான திறன்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பசுமை விவசாய உற்பத்தி மற்றும் பதப்படுத்தல் துறைகளுக்காக முதலீடுகளுக்கு சிறந்த சந்தர்ப்பங்கள் நிலவுவதோடு, இந்த உற்பத்திகளுக்கு புதிய ஏற்றுமதி சந்தை வாய்ப்புகளும் காணப்படுகின்றன. இலங்கையில் பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களை உலகளாவிய சந்தைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் மேலும் பல்வேறு ஏற்றுமதி பொருளாதார பெறுமதி ஒன்றை நாட்டில் உருவாக்க முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஏற்றுமதித் துறையில் நிலவுகின்ற சிக்கல்களை உடனடியாக தீர்ப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி ஏற்றுமதித் துறையின் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக அரசாங்கம் மற்றும் தனியார் துறையினர் கைகோர்த்து இணைந்துச் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts: