எதிர்வரும் 4 ஆம் திகதி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடக்க வாய்ப்பு!

Thursday, April 30th, 2020

நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டுவதற்கு அரசாங்க உயர் மட்டம் ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ன..

நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரோனா அச்சுறுத்தலினால் திட்டமிட்டவாறு பொதுத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 20 இல் தேர்தலை நடத்தலாம் என தேர்தல் ஆணைக்குழு முதலில் தெரிவித்திருந்த போதிலும், அந்தத் திகதியில் கூட தேர்தலை நடத்த முடியாது என பின்னர் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்திருந்தார்.

இந்தப் பின்னணியில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுமாறும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சிகள் இணைந்து ஜனாதிபதியிடம் எழுத்து மூலமான கோரிக்கையை விடுத்திருந்தன.

எதிர்க்கட்சிகளின் இந்தக் கோரிக்கை குறித்து ஜனாதிபதி தரப்பிலிருந்து இதுவரையில் உத்தியோகபூர்மாக எந்தவிதமான கருத்தும் வெளிவராத நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்துவதற்குத் திட்டமிடப்படுவதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளையில் கொரோனா தொற்றை ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னதாகக் கட்டுப்படுத்திவிடலாம் என அரசாங்கம் முதலில் எதிர்பார்த்த போதிலும் தற்போது படையினரிடையே குறித்த தொற்றுப் பரவி கட்டு மீறிப்போவது நாட்டுக்கு பெரும் சவாலாக உள்ள நிலையில் அநேகமாக எதிர்வரும் திங்கட்கிழமை இந்தக் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: