எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதிவரை சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் – இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவிப்பு!

Friday, September 25th, 2020

நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என  இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது

இன்று இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை வெளியிட்டுள்ள  அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபை இதற்கு முன்னர் வெளியிட்டிருந்த அறிக்கையில் விமான நிலையங்கள் ஒக்டோபர் முதலாம் திகதி வரை மாத்திரம் மூடப்பட்டிருக்கும் என அறிவித்திருந்தது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்து வந்த விமானங்கள், இயந்திர கோளாறு காரணமாக தரையிறங்கும் விமானங்கள், எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கும் விமானங்கள், விமான பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காக வரும் விமானங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இலங்கைக்கு வரும் இந்த விமானங்களில் ஊடாக நாட்டுக்குள் வரும் அனைவரும் இலங்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழங்கியுள்ள கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும்.

சிவில் விமான சேவைகள் அதிகார சபை எடுத்துள்ள இந்த தீர்மானம் மிகவும் சிறந்தது என தொற்று நோய் தடுப்பு தொடர்பான விசேட மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: