எதிர்க்கட்சி இல்லாத வாக்கெடுப்பு : நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி வென்றதாக சபாநாயகர் அறிவிப்பு!

Saturday, February 18th, 2017

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளதை அடுத்து எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

மிகுந்த சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்குப் பிறகு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால், அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதற்காக சட்டப்பேரவை வளாகம் முழுவதும் போலிஸார் குவிக்கப்பட்டனர்.

சசிகலா ஆதரவாளரான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றது. 15 நாள்களுக்குள் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சட்டப் பேரவை இன்று சனிக்கிழமை காலை 11 மணிக்கு பேரவை கூடியது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி திமுக, காங்கிரஸ், பன்னீர்செல்வம் அணியினர் கோரிக்கை வைத்து பேரவையால் அமளியில் ஈடுப்பட்டனர். இதையடுத்து இரண்டு முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.

திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளியேறினார். இதையடுத்து எதிர்க்கட்சியினர் இல்லாமல் குரல்வாக்கெடுப்பு நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கி நடைபெற்று வந்தது.

இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 122 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக 11 எம்எல்ஏக்கள் வாக்குகள் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது.இதையடுத்து தேதிக்குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

edapadi78989-18-1487411836

Related posts: