எதிர்காலச் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தேவையான திறன்களை இளைஞர்களுக்கு சாரணர் உலகம் அளிக்க வேண்டும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, July 18th, 2021

“எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை, மோதல்கள் மற்றும் தொற்றுநோய், உயிர்ப் பல்வகைமை இழப்பு, சுற்றுச்சூழல் அழிவு, உணவுப் பாதுகாப்பு, நீருக்கான அணுகல் போன்ற பிரச்சினைகள், எதிர்காலத்தில் வெற்றிகொள்ள வேண்டிய சவால்களாகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த எதிர்காலச் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தேவையான திறன்களை இளைஞர்களுக்கு சாரணர் உலகம் அளிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் எமது வாழ்வொழுங்கை மாற்றிக் கொள்வதற்கு எம்மைக் கட்டாயப்படுத்தும் உலகளாவிய கொவிட் 19 தொற்று நோய் நிலைமைகளுக்கு மத்தியில், அதனை ஒரு சவாலாகக் கருதாது, தற்போதைய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி சாரணர் இயக்கம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்பு, எளிய ஆனால் ஆழமான முன்னுதாரணத்தை வழங்கியிருக்கிறது” எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்வேறு நாடுகளுக்கே உரிய தனித்துவமான கலாசாரப் பெறுமானங்களை உள்ளடக்கிய ‘உலகளாவிய கலாசார சாரணர் ஜம்போரி’, இலங்கையின் தலைமை சாரணரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமானது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தனித்துவமான கலாசார வேறுபாடுகள் மற்றும் பாரம்பரியங்களை ஒவ்வொருவரிடம் இருந்தும் கற்றுக்கொள்வது, எதிர்கால உலகளாவிய செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அடித்தளமாக அமையும் என்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி தற்போதைய இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும இடையில் ஏற்படுத்தப்படும் உறவுகள், எதிர்காலத்தில் தெளிவான உலகளாவிய நிலைப்பாட்டுக்கு காரணமாக அமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கலாசார ரீதியாக ஒரே சாரணர் உலகம்” என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற உலகளாவிய கலாசார சாரணர் ஜம்போரியின் மூலம், தற்போதைய கொவிட் நோய்த்தொற்று நிலைமைகளுக்கு மத்தியில், வீடுகளில் இருக்கும் சாரணர்களுக்கு கலாசார ரீதியாக பல்வேறு புத்தாக்க நிகழ்ச்சித்திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சாரணர் வரலாற்றில் முதன் முறையாக இணைய தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெறும் சர்வதேச சாரணர் ஜம்போரிக்கு, சாரணர்கள் மற்றும் சாரணர் தலைவர்கள் இருபதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பதிவு செய்துள்ளதாக, ஜம்போரி ஆலோசகர் உலக சாரணர் குழு உறுப்பினர் சட்டத்தரணி ஜனப்ரித் பெர்னாண்டோ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: