ஊழியர் நம்பிக்கை நிதிய சபையின் 35வது ஆண்டு நிறைவு விழா!
Wednesday, November 30th, 2016
ஊழியர் நம்பிக்கை நிதிய சபையின் 35வது ஆண்டு நிறைவு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது.
கடந்த ஞாயிரன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ஊழியர் நம்பிக்கை நிதிய சபையை ஆரம்பிப்பதற்கு ஆலோசனையை முன்மொழிந்த மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலி மற்றும் மறைந்த கப்டன் சி.வி.ஜே.செனவிரத்ன ஆகியோரது உருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
சிறந்த சேவையை ஆற்றிய 11 பேருக்கு ஜனாதிபதியினால் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. உழைக்கும் மக்கள் அவர்களது எதிர்கால நிலை தொடர்பில் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் மட்டுமன்றி, சேவைப் பெறுபேற்றிலும் நிர்வாகிகளாக இருக்க வேண்டும் எனும் எண்ணக்கருவில் முன்னாள் வர்த்தக அமைச்சர் லலித் அத்துலத்முதலி அவர்களின் வழிகாட்டலில் ஸ்தாபிக்கப்பட்ட ஊழியர் நம்பிக்கை நிதியம் 1981 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் திகதியிலிருந்து இயங்கிவருகிறது.
இடைநிலை அரச மற்றும் தனியார் துறையிலுள்ள அனைத்து ஊழியர்களும் இந்த நிதியத்தில் உறுப்புரிமை பெறுகின்றனர். தற்போது இருபத்தைந்து லட்சம் உழைக்கும் மக்கள் அதன் உறுப்பினர்களாக உள்ளார்கள். ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் 35 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையும் முதல் நாள் தபாலுறையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
‘சுரக்ஷா’ எனும் நூல் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் மகிந்த மடிகஹஹேவாவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இரண்டு சிறுநீரக நோயளர்களுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான நிதியுதவியும் ஜனாதிபதி அவர்களால் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது
Related posts:
|
|