உச்சபட்ச பாதுகாப்புடன் வாக்களிப்பிற்கான ஏற்பாடுகள் அனைத்தும்பூர்த்தி – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Monday, August 3rd, 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் உச்சபட்ச பாதுகாப்புடன் வாக்களிப்பிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. எனவே இச்சமின்றி வருகை தந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள், வாக்குபெட்டிகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்முறை உள்ளிட்ட விடயங்கள் பற்றி தெளிவுபடுத்தி அவர் விடுத்த அறிவித்தலேயே இவ்வாறு குறிப்பிட்டார் –

அதில் அவர் மேலும் கூறுகையில் ,

வாக்களிப்பு நிலையங்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு முகக்கவசம் அணிந்து வருவது அத்தியாவசியமானதாகும். வாக்களிப்பு நிலையத்திற்கு வெளியிலும் உட்செல்லும் போதும் வாக்களித்த பின்னரும் செனிடைசர் மூலம் கைகள் கிருமி நீக்கப்படும். வாக்காளர்கள் வரும் போது கருப்பு அல்லது நீல பேனை கொண்டு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறில்லையெனில் கிருமி நீக்கம் செய்யப்பட்ட பேனை அதிகாரிகளால் வழங்கப்படும். இவை மாத்திரமின்றி செல்லுபடியாகும் அடையாள அட்டையை எடுத்து வரவேண்டியது அத்தியாவசியமானதாகும்.

வாக்களிக்கும் முறை அரசியல் கட்சிகளினதும் சுயேட்சை குழுக்களினதும் பெயர்கள் அவற்றிக்குரிய சின்னங்களுடன் மேல் பகுதியில் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு சின்னத்துக்கும் எதிரே ஒரு வெற்றுக்கூடு உள்ளது.

வாக்காளர்கள் தாம் விரும்பும் எந்தவொரு கட்சிக்கோ அல்லது சுயேட்சை குழுவுக்கோ அதற்குரிய சின்னத்துக்கு எதிரேயுள்ள வெற்றுக்கூட்டினுள் அடையாளமிட முடியும். வாக்கினை அடையாளமிடும் போது விரும்பிய சின்னத்துக்கு எதிரேயுள்ள வெற்றுக் கூட்டினுள் புள்ளடியொன்றை (x) இ வேண்டும்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒதுக்கப்பட்ட இலக்கங்கள் தேர்தல் மாவட்டத்திற்குள் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குச்சீட்டின் கீழ்ப்பகுதியில் காட்டப்பட்டுள்ளன. விருப்புக்களை அடையாளமிடும் போது வாக்காளர்கள் விரும்பிய வேட்பாளரின் இலக்கத்தின் மீது புள்ளடியொன்றை (x) இட வேண்டும்.

எண்ணிக்கையில் மூன்றுக்கு மேற்படாதவாறு வேட்பாளர்களுக்கு அதாவது மூன்றுக்கு மேற்படாத எண்ணிக்கையான வேட்பாளர்களுக்கு அவர்களது இலக்கங்கள் மீது விருப்பு வாக்குகளை அடையாளமிட முடியும்.

ஒரு கட்சி அல்லது குழு சார்பாக வாக்கொன்று அடையாளமிடப்படாத வாக்குசீட்டு காணப்படுமாயின் அது செல்லுபடியற்றதாகவே கருதப்படுவதோடு அந்த வாக்கு நிராகரிக்கப்படும்.

முதலில் கட்சிக்கு எதிரே வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்பதோடு அதன் பின்னரே விருப்புக்களை அடையாளமிட முடியும். வாக்களிப்பதற்கு புள்ளடியை (x) மாத்திரமே பயன்படுத்த முடியும். உச்சபட்ச பாதுகாப்புடன் வாக்களிப்பிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. எனவே பயமின்றி வருகை தந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

Related posts: