ஊடகங்கள் அடக்கப்படமாட்டாது ; தேசிய ஊடக மையத்தின் தலைவர் பாகீர் மார்கார்!

Tuesday, September 20th, 2016

தேசிய ஊடக மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மார்கார் நேற்று(19)  தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பத்தரமுல்ல – விசும்பாயாவில் அமைந்துள்ள தேசிய ஊடக நிலையத்தின் காரியாலயத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடவுள்ள இந்த நிலையத்தின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை நியமிக்க அண்மையில் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

தேசிய ஊடக மையத்தின் தலைவராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட இம்தியாஸ் பார்கிர் மார்கார், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“இந்தப் புதிய நிறுவனத்திற்கு தலைவராக என்னை நியமித்ததையிட்டு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நன்றி கூறுகின்றேன். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு, பிரதமரின் ஊடகப் பிரிவு மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து, மக்களுடைய கருத்துக்களைப் பெறவும், அரசாங்கத்தின் கொள்கை, வேலைத்திட்டங்களை மக்களுக்குத் தெரியப்படுத்தவும் இப்புதிய தேசிய ஊடக மையத்தின் ஊடாக மேற்கொள்ள எதிர்பார்க்கின்றேன்.

தேசிய ஊடக நிலையம் இலங்கைக்கு புதியவிடயமாக இருந்தாலும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இது போன்ற ஊடக நிலையங்கள் காணப்படுகின்றன. தொழில்வாண்மை ரீதியாக சர்வதேச தரத்தில் இதனை கொண்டுவர நாம் எதிர்பார்க்கின்றோம்.

இன்று புதிய யுகத்தின் ஆரம்பம் இந்த நாட்டில் உருவாகியுள்ளது. காலகாலமாக காணப்பட்ட வெறுப்பு அரசியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டின் பிரதான இரண்டு அரசியல் சக்திகளும் இணைந்துள்ளன. இனரீதியான ஒற்றுமை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. அந்த ஒற்றுமை ஊடாக மக்கள் அபிலாசைகளை நிறைவேற்ற அரசொன்று உருவாகியுள்ளது. ஊடகங்களுக்கு சட்டதிட்டங்களை விதிக்க எம்மால் முடியாது. புதிய யுகமொன்றுக்காக, ஜனநாயக யுகமொன்றுக்காக நீதியின் ஆதிக்கம், மக்களுக்கு பொறுப்பு கூறும் சமூகமொன்றுக்காக ஜனாதிபதியும் பிரதமரும் இந்த பயணத்தை தொடர்ந்துள்ளனர். ஊடகங்களின் ஆதரவுடன் மக்கள் வேண்டியுள்ள அந்த வரத்தை நிறைவேற்ற இந்த நிறுவனம் செயற்படும்” – என்றார்.

download

Related posts: