உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கல்வி முறையொன்று நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Thursday, August 17th, 2023

எதிர்கால உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கல்வி முறையொன்று நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு துறைகளைச் சார்ந்துள்ளதுடன், செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழிநுட்பம், வலுசக்தி சேமிப்பு, வலைப்பதிவு பிளெக்செயின் தொழில்நுட்பம் மற்றும் ஜெனொம் விஞ்ஞானம் போன்ற துறைகள் இன்று உலகப் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அந்த தொழில் நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்ல நமது வருங்கால சந்ததியை தயார்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் கடந்த காலத்தைப் பற்றி மாத்திரம் சிந்திக்கும் அரசியல் சம்பிரதாயத்திலிருந்து விலகி, எதிர்காலத்தை மையமாகக் கொண்டு முன்னோக்கிச் செல்ல அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், புதிய கல்வி முறையின் மூலமே இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க –

பாடசாலை என்பது, எதிர்கால சந்ததியை உருவாக்கும் ஒரு இடமாகும். அதன் மூலம் நாட்டுக்கு சேவை செய்ய விரும்பும் ஒரு குடிமகனை உருவாக்கும் இயலுமையைக் கொண்டது. ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த கல்வி முறைக்கும் இன்றுள்ள கல்வி முறைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் வழங்கப்பட்ட பாடப்புத்தகங்கள் மாத்திரமே அன்று இருந்தன. ஆனால் இன்று கல்விக்கு, கையடக்கத் தொலைபேசி, கணினி பயன்பாடு என்பன இணைந்துள்ளன. அன்று மின்சார வாகனங்கள் பற்றி சிந்தித்திருக்கவில்லை. ஆனால் இன்று இலத்திரனியல் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கடந்த காலங்களில் வேகமாக முன்னேறி வந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. அத்தகைய சூழலில் இன்று புதிய கல்வி முறைமையொன்று அவசியமாகும்.

சமுதாயத்திற்கு ஏற்ற கல்வி முறை இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில், நல்ல எதிர்கால சந்ததியை உருவாக்க வேண்டும். சவால்களை முறியடிக்கக்கூடிய எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கான அடிப்படை நடவடிக்கைகளை கல்வியால் மாத்திரமே மேற்கொள்ள முடியும்.

எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கக்கூடிய, எதிர்காலத்தைப் பற்றிய புரிதல் கொண்ட கல்வி முறைமையை நம் நாட்டில் உருவாக்க வேண்டும்.

மற்றைய விடயம், உலகப் பொருளாதாரம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த பல்வேறு துறைகளைச் சார்ந்துள்ளது.செயற்கை நுண்ணறிவு, ரோபா தொழிநுட்பம், வலு சக்தி சேமிப்பு, பிளொக் செயின் தொழில்நுட்பம், ஜெனொம் விஞ்ஞானம் ஆகிய சில துறைகள் மாத்திரம் உலகப் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துகின்றது. அதற்கு நாமும் தயாராக வேண்டும்.

இந்த தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலகப் பொருளாதாரத்தில் 300 முதல் 700 டிரில்லியன் டொலர் வரையிலான பாரிய பெறுமதி இணையும் என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.இந்த பொருளாதாரத்துடன் தான் உலகம் முன்னேறி வருகிறது. அதற்கு நாமும் தயாராக வேண்டும்.

அதன்படி, அரச பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை நிறுவ நாம் திட்டமிட்டுள்ளோம். பணம் காரணமாக கல்வியை நிறுத்தாமல், மாணவர்களுக்கு அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் இணைவதற்கு, வெளிநாடுகளைப் போல் மானிய முறையில் கடன் வழங்கும் திட்டத்தை நாம் செயற்படுத்துவோம்.

இதேவேளை அரசியல்வாதிகள் கடந்த காலத்தைப் பற்றி மாத்திரமே சிந்திக்கிறார்கள். மாணவர்களாகிய நீங்கள் நிகழ்காலத்தைப் பற்றி சிந்திக்கிறீர்கள். ஆனால் நாம் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறோம். எனவே இதை சரி செய்து கொண்டு முன்னேற வேண்டும். கடந்த காலத்தைப் பற்றி சிந்திப்பவர்களை எப்படியாவது நிகழ்காலத்திற்கு கொண்டு வர வேண்டும். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது எதிர்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

இந்தக் கல்வி முறையை மாற்றாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை.புதிய கல்வி முறையின் மூலமே நாம் முன்னேற முடியும்.தொழிற்சாலைகள், கட்டிடங்கள் மற்றும் வீதிகள் அமைக்க முடியும், என்றாலும் கல்வி அறிவு இல்லாமல் எதிர்காலம் இல்லை.எனவே, புதிய கல்வி முறையை உருவாக்கி நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க அரசாங்கம் என்ற வகையில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: