உர வழங்கல மற்றும் விநியோகம் தொடர்பில் விவசாய சமூகம் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்பு!

Wednesday, June 10th, 2020

உர வழங்கள், விநியோகம் மற்றும் பயன்பாடு தொடர்பில் விவசாய சமூகம் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு துறைசார் தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் நீண்ட காலமாக பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பமாவதைத் தொடர்ந்து பல மாகாணங்களில் உரப் பிரச்சினை எழுகின்றது. சிறிய, நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் அதற்கு தீர்வு கண்டறியப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இரசாயன உரப் பாவனை காரணமாக மண்ணின் தன்மை பெருமளவு மாற்றமைடந்துள்ளது. அதிக அறுவடையை எதிர்பார்த்து விவசாயிகள் அதிகளவு உரத்தை பயன்படுத்திவருகின்றனர்.

இந்த நிலைமைகளில் இருந்து படிப்படியாக விலகி சேதன உரப் பாவனைக்கு திரும்ப வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

உர வழங்கள், விநியோகம் தொடர்பில் தற்போதைய நிலைமைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

மேலும் சிறு போக பயிர்ச்செய்கை ஆரம்பமாவதுடன் உரப் பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. நெல்லுக்கு அதிக விலை கிடைப்பதன் காரணமாக விவசாயிகள் பெருமளவில் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றனர்.

விவசாய இறக்குமதிகளுக்கான கட்டுப்பாடுகள், தோட்டப் பயிர்ச்செய்கை மற்றும் மரக்கறி, பழங்கள் மற்றும் தானிய பயிர்ச்செய்கை காணிகளின் அளவு அதிகரித்துள்ளமையும் உரப் பிரச்சினைக்கு காரணமாகும் என்று அதிகாரிகளும் ஆளுநர்களும் தெரிவித்தனர்.

உரத்தினை பயன்படுத்த வேண்டிய முறை பற்றி விவசாயத் துறை அதிகாரிகளின் ஊடாகவும் ஊடகங்களின் வாயிலாகவும் விவசாயிகளை அறிவூட்ட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

வடக்கில் விவசாயிகள் சேதன உரப் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம் கிடைக்கும் அறுவடைகள் தரத்திலும் அளவிலும் அதிகம் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. கடந்த காலத்தைப் போன்று நாட்டின் ஏனைய மாவட்டங்களின் விவசாயிகளையும் சேதன உரத்தினை பயன்படுத்தச் செய்வதன் மூலம் சில சுகாதார பிரச்சினைகளில் இருந்தும் விடுபட முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்

அத்துடன் சேதன உரத்தினை உரிய நியமங்களுடன் உற்பத்தி செய்வது குறித்து விசேட கவனம் செலுத்துமாறும், சேதன உரத்தினை விரைவாக பயன்படுத்தக் கூடிய பயிர்ச்செய்கை என்னவென்று கண்டறியுமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

மேலும் சேதன உரத்தை பயன்படுத்தி பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்கள் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி கண்டறிய வேண்டியதன் தேவையையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

சேதன உர உற்பத்தியை பாரியளவிலான வியாபாரமாக முன்னேற்றுவதன் மூலம் இரசாயன உரத்திற்கான கேள்வியை குறைக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: