உரத்திற்கான வவுச்சர்கள் மே மாத இறுதிக்குள் வழங்கப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Saturday, May 13th, 2023

உரத்திற்கான வவுச்சர்கள் மே மாத இறுதிக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த வவுச்சர்கள் இன்று அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்திற்கு வழங்கப்படும். அவற்றை 10 நாட்களுக்குள் அச்சடித்து முடிக்க முடியும். இந்த வவுச்சர்களை குறிப்பாக பண்டி உரம் கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்தவும். அத்துடன் இந்த வவுச்சர் ஊடாக விருப்பமான உர வகைகளை கொள்வனவு செய்ய முடியும் என்றும் கூறினார்.

மேலும், இம்முறை சிறுபோக பயிர்ச்செய்கைக்கு தரமான விதைகளைப் பயன்படுத்துமாறும், அதனூடாக அதிக விளைச்சலை பெற முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, விளைச்சலுக்கு தேவையான கலைக்கொல்லிகள் மற்றும் கிருமி நாசினிகள், தனியார் நிறுவனங்களினால் இறக்குமதி செய்யப்படும். அவற்றை குறைந்த விலையில் வழங்க அந் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் சலுகையினால் விவசாய உபகரணங்களின் விலைகள் குறைந்துள்ளன. தற்போது உரங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. உரங்களை சந்தையில் இருந்து குறைந்த விலைக்கு கொள்வனவு செய்ய முடிகிறது. இதனூடாக எதிர்காலத்தில் வெற்றிகரமான சிறு போக பருவத்தை எதிர்பார்க்கலாம் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் பாஸ்மதி அரிசி மட்டுமே இறக்குமதி செய்யப்படும். ஏனைய அரிசி வகைகள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது. அரிசி உற்பத்தி அதிகமாக இருப்பதால், கால்நடை உணவிற்கு பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்’ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: