உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 33 பேருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு வழக்கு – அமைச்சர் சரத் வீரசேகர!

Friday, December 18th, 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள 267 பேரில் 33 பேருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என மக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கண்டி தலாதா மாளிகைக்கு வழிபாட்டுக்கு சென்ற அமைச்சர் அங்கு மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பில் தெளிவுபடுத்தும்போதே இவ்வாறு குறிப்பட்டுள்ளார்..

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தினத்தில் 8 இடங்களில் குண்டை வெடிக்கச்செய்தமை தொடர்பான பொலிஸ் விசாரணை நடத்தப்பட்டு, அதுதொடர்பான 8 விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு கையளித்திருக்கின்றோம்.

இந்த தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 267 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 33 பேருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு வழக்கு தொடுக்க இருக்கின்றோம்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் சிலர் சிறைச்சாலைகளிலும் மற்றும் சிலர் தடுப்புக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதுதொடர்பில் வழக்கு தாக்கல் செய்வது தாமதிப்பது தொடர்பில் சட்டமா அதிபரை சந்தித்து கலந்துரையாடினேன்.

இதன்போது அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை இடம்பெற்றுவருகின்றது.

அதன் அறிக்கை வரும் வரைக்கும் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. ஜனாதிபதி ஆணைக்குழுவில் வெளிப்படும் புதிய சாட்சிகளின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்ய முடியுமாக இருப்பதால்,

அதனால் ஏற்படும் முரண்பாடுகளை தவிர்த்துக்கொள்ளும் நோக்கில், குறிப்பிட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்படும்வரை இருக்கவேண்டும்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் இதுதொடர்பான அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த பின்னரே வழக்கு தொடுக்க முடியும் என அவர் என்னிடம் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பில் ஆராய்வதற்காக 12 சட்டத்தரணிகள் சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அத்துடன் விசாரணை நடவடிக்கைகள் முறையாக இடம்பெற்றிருக்கின்றதா என தேடிப்பார்க்க வேறு ஒரு குழுவையும் நான் நியமித்திருக்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: