தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் திருந்துவோம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்!
Tuesday, February 28th, 2017நாம் தவறுகள் விட்டிருந்தால் அதை நீங்கள் நேசமுடன் சுட்டிக்காட்டினால் நாம் எம்மை திருத்திக்கொள்வோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு தேவா கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் –
நாம் உங்களுக்காகவே உங்கள் மத்தியில் தொடர்ச்சியாக நின்று உழைத்து வருபவர்கள். பலத்த அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் மத்தியில் நீங்கள் சிக்குண்டு கிடந்தபோது உங்கள் துயர் துடைக்க நாம் மட்டுமே உங்களை தேடிவந்தவர்கள்.
நாம் உங்களுக்கு ஆற்றிய பணிகளில் தவறுகள் இருக்கலாம். அல்லது குறைகள் இருக்கலாம். எதுவாயினும் அதை நீங்கள் எமக்கு துணிச்சலுடன் சுட்டிக்காட்டும் உங்கள் ஜனநாயக உரிமைக்கு நாம் என்றும் மதிப்பளிப்பவர்கள்.
அகவே நாம் தவறு விட்டிருந்தால் அல்லது குறைகள் விட்டிருந்தால் அவைகளை எமக்கு சுட்டிக்காட்டங்கள். உங்களுக்கும் எமக்குமான உறவு தாய் பிள்ளை உறவு. பிள்ளைகள் தவறுவிட்டால் பெற்றோர் பொறுப்பதுண்டு. அதுபோல் நாம் உங்களுக்கு தவறிழைத்திருந்தால் அதை பொறுத்தருளும் பெருமனம் உங்களிடமே உண்டு.
இந்த மக்கள் சந்திப்பில் எனது நன்றியுரையின்போது நான் உங்களிடம் கேட்டுக்கொண்டது எமது தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் என்பதையே.
தவறுகள் இருப்பதாக உங்களில் யாரும் தெரிவித்திருக்கவில்லை. அனாலும் நாங்கள் விட்ட குறைகளை மட்டும் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். அரசியல் பலத்தை எம்மிடம் வழங்குங்கள் நீங்கள் கூறிய குறைகளைக்கூட நாம் நிறைவுசெய்து காட்டுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸ்ரி அலன்ரின் (உதயன்) கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கட்சியின் நெடுந்தீவு பிரதேச நிர்வாக செயலாளர் முரளி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|