உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஐநா விசேட அறிக்கை!

Sunday, August 4th, 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஐஎஸ் அமைப்பிற்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு அதன் விசேட கண்காணிப்பாளர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் விசேட கண்காணிப்பாளர்கள் சமர்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கு ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி உரிமை கோரியிருந்தார் எனினும் உண்மையில் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து ஐஎஸ் அமைப்பிற்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை முன்னெடுத்த தேசிய தவ்ஹீத் ஜமாத்தும் ஜேஎம்டீ அமைப்பும் 2014 இல் உருவாக்கப்பட்டவை. தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தாக்குதலிற்கு முன்னர் 50 உறுப்பினர்களை கொண்டிருந்தது.

ஜேஎம்ஐ அமைப்பு 2015 இல் உருவாக்கப்பட்டுள்ளது. அது சுமார் 150 உறுப்பினர்களை கொண்டிருந்தது. அவர்களில் பலர் சிரியா சென்று ஐஎஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்றுள்ளனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் இணையம் மூலம் ஐஎஸ் அமைப்பு உள்ளுர் வெடிகுண்டுகளை தயாரிக்கும் முறை குறித்து கற்றுள்ளனர். தாங்கள் தயாரித்த குண்டுகளை பரிசோதனை செய்துள்ளனர்.

ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ள போதிலும் உறுப்பு நாடுகள் மேற்கொண்ட விசாரணைகள் ஐஎஸ் அமைப்பிற்கு இந்த தாக்குதலுடன் நேரடி தொடர்பில்லை என்பதும் அந்த அமைப்பு முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் உள்ளுரிலேயே உருவாக்கப்பட்டதுடன் ஐஎஸ் அமைப்பின் நடவடிக்கைகளால் உந்தப்பெற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஐஎஸ் அமைப்பின் பிரச்சாரங்கள் தொடர்ந்தும் கவனத்தை ஈர்ப்பவையாக உள்ளதையும் உள்ளுர் குழுக்கள் எதிர்பாராத இடங்களில் உருவாகி குறிப்பிடத்தக்க பயங்கரவாத திறனை உருவாக்குபவையாக மாறக்கூடிய ஆபத்துள்ளதையும் புலப்படுத்தியுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: