உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவவகாரம் – சேனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய விசேட தெரிவுக்குழுவை நியமிக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைப்பு!

Tuesday, October 17th, 2023

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொடவினால் இந்த பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பல்வேறு குழுக்களின் விசாரணைகளின் பின்னரும் இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 101 இன் விதிமுறைகளுக்கு அமைய 11 பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சபாநாயகரினால் நியமிக்கப்பட வேண்டுமெனவும் முன்மொழியப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரையும் குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பதற்கும், எந்தவொரு நபர் மற்றும் ஆவணம் அல்லது பதிவேட்டினை பெறுவதற்கும் அத்தகைய ஆதாரங்களை எழுத்துப்பூர்வமாக அல்லது வாய்மூலமாக பெறுவதற்கும் குறித்த குழுவிற்கு அனுமதி வழங்கும் வகையில் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முழுமையாக பரிசீலிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த விசேட குழுவின் முதலாவது கூட்டத்தில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அல்லது நாடாளுமன்றம் வழங்கக்கூடிய காலப்பகுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பபடுமென எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: