உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் புதிய குழுவை நியமித்தார் ஜனாதிபதி !

Saturday, February 20th, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறை மேற்பார்வை குழுவின் அறிக்கைகளை ஆராய்வதற்கும், பரிந்துரைகளை செய்வதற்கும் ஜனாதிபதியால் 6 அமைச்சர்கள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் தலைவராக அமைச்சர் சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன்  ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, உதய கம்மன்பில, ரமேஸ பதிரண, பிரசன்ன ரணதுங்க, ரோஹித்த அபேகுணவர்தன ஆகிய அமைச்சர்கள் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறை மேற்பார்வை குழுவின் அறிக்கைகள் ஜனாதிபதி அலுவலகத்தினால் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

குழுவின் செயற்பாடுகளுக்காக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட ஏனைய செயற்பாடுகளுக்காக குழுவின் செயலாளராக ஜனாதிபதி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தா ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவின் அறிக்கையை 2021 மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: