உத்தேச மிகைவரி சட்டமூலத்தில் இருந்து, 13 நிதியங்கள் அகற்றப்பட்டுள்ளது – சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு தெரிவிப்பு!

Wednesday, March 2nd, 2022

உத்தேச மிகைவரி சட்டமூலத்தில் இருந்து, 13 நிதியங்கள் அகற்றப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட 13 நிதியங்கள், மிகைவரி சட்டமூலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

வருடாந்தம் 2000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானத்தை ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, ஒருதடவையில் 25 சதவீத வரியை அறவிடும் நோக்கில் மிகைவரி சட்டமூலம் நிதி அமைச்சினால் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தின் ஊடாக ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றிற்கும் 25 சதவீத வரியை அறவிட முயற்சிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானது என்று உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே குறித்த சட்டமூலத்தில் 13 நிதியங்கள் உள்ளடக்கப்பட மாட்டாது என்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: