உணவு நெருக்கடி அடுத்த வருடமும் நீடிக்கும் – உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
Wednesday, September 14th, 2022இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்தும் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, விவசாயத்தை நவீனமயப்படுத்தி உற்பத்தி மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்க முடியும் என்றும் இதன்மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டும் துறையாக விவசாயத்தை மாற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
உலகின் உணவு நெருக்கடியை கருத்திற்கொண்டு, இலங்கை எதிர்நோக்கும் உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு திட்டமிட்டு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டத்துடன் அனைவரும் கைகோர்க்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இன்று நாட்டில் ஒரு பகுதியினர் உணவின்றி தவிக்கின்றனர். நடுத்தர மக்கள் வருமானத்தை இழந்துள்ளனர். அவர்கள் யாரிடமும் பிச்சை எடுக்க விரும்புவதில்லை. அடுத்த வருடமும் இந்த பிரச்சனையை சந்திக்க நேரிடும். இன்று உலகம் முழுவதும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் போர் காரணமாக, இலங்கைக்கு தேவையான கோதுமை கிடைக்கவில்லை. இது இலங்கை போன்ற சிறிய நாடுகளைப் பெரிதும் பாதிக்கிறது. இப்போது இந்தியா உணவு ஏற்றுமதியை நிறுத்திவிட்டது. சீனாவும் குறைத்துவிட்டது. இந்த நிலைமை இந்த டிசம்பரில் முடிவுக்கு வராது.
எனவே இந்த நிலை இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கக்கூடும் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|