உடனடியாக வெளிநாடு செல்வதற்கான அவசியம் இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டை பெற விண்ணக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவுறுத்து!

Sunday, June 19th, 2022

உடனடியாக வெளிநாடு செல்வதற்கான அவசியம் இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டை பெற விண்ணக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு பிரிவின் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பிரியந்த ஹப்புஆராச்சி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் –

“கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் சுமார் 350,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்களில் 60,000 பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

வெளிநாடு செல்வதற்கான அவசரத்திற்காக கடவுச்சீட்டு பெற அனைவரும் வரவில்லை என்பது வெளிநாடு சென்றுள்ளவர்களின் எண்ணிக்கை ஊடாக தெரியவந்துள்ளது.

இது கடவுச்சீட்டு அலையாக மாறியுள்ளது. அதனைப் பார்த்தே ஏனையவர்களும் அவசரமாக கடவுச்சீட்டு பெற வருகின்றார்கள். தற்போதைய நிலையில் அவசரமாக கடவுச்சீட்டை பெற வேண்டிய தேவை இல்லாதவர்கள், அதற்கு விண்ணப்பிக்க வேண்டாம். அவசியமில்லை என்றால் மக்கள் கூட்டம் குறைந்த பின்னர் பெற்றுக் கொள்ள முடியும்.

எங்களால் ஒரு நாள் சேவையில் வழங்க கூடிய எண்ணிக்கை தாண்டிச் சென்று விட்டது. சிலர் இரண்டு நாட்களாக கடவுச்சீட்டு அலுவலகத்தில் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஏன் கடவுச்சீட்டு பெறுகின்றீர்கள் என வினவிய போது அவர்களிடம் உரிய காரணமில்லை.

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் ஒரு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வோம் என்ற எண்ணத்தில் பலர் வருகின்றனர்.

இதனால் தேவையற்ற வரிசைகள் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: