ஈ.பி.டி.பி ஆதரவு: பருத்தித்துறை நகரசபை ஆட்சியையும் வசப்படுத்தியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

Tuesday, March 27th, 2018

பருத்தித்துறை நகரசபைக்கான ஆட்சிப் பொறுப்பை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னகப்படுத்தியுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முழுமையாக வெற்றிகொண்ட ஊர்காவற்றுறை பிரதேச சபையை தவிர்ந்த ஏனைய சபைகளில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க தேவையான ஆசனங்களைப் பெறாத நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு குறித்த சபைக்கான நகரபிதா தெரிவு நடைபெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும்  தத்தமது சார்பில் போட்டியிடும் பிரதிநிதிகளை முன்மொழிந்திருந்தன.

15 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த நகரசபையில் 6 ஆசனங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும்  5 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் 2 ஆசனங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் தலா ஒவ்வொரு ஆசனங்களை தமிழர் விடுதலைக் கூட்டணியும் சுயேட்சைக் குழுவும் பெற்றிருந்தன.

இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நடைபெற்ற குறித்த சபைக்கான வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெளிப்படையான ஆதரவை வழங்கிய நிலையில் குறித்த சபைக்கான ஆட்சி அதிகாரத்ததை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: