இலங்கை மீது முழுமையான நம்பிக்கையுண்டு – மனித உரிமைகள் விவகாரத்தை அரசியலாக்காதீர்கள் – சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்து!

Sunday, February 28th, 2021

மனித உரிமைகளை பாதுகாப்பதிலும், சமூக வளர்ச்சி குறித்தும் இலங்கை அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் அரசியல் நோக்கங்களுக்காக மனித உரிமைகளைப் பயன்படுத்துவதை கடுமையாக எதிர்ப்பதாக சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்கில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சக செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் நடைபெற்ற இலங்கை தொடர்பான நாடு சார்ந்த தீர்மானம் குறித்த கலந்துரையாடலின் போது இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து சில மேற்கத்திய நாடுகள் கேள்வி எழுப்பின.

ஒரு நட்பு நாடாக, இலங்கை அரசியல் ஸ்திரத்தன்மை, தேசிய ஒற்றுமை மற்றும் ஒற்றுமையை நிலைநிறுத்தும் என்றும், தேசிய வளர்ச்சியில் அதிக சாதனைகளை செய்யும் என்றும் சீனா நம்புகிறது” என வாங் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், நிலையான சமூக பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும், தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை சீனா பாராட்டுகிறது.

மனித உரிமைகள் விடயத்தை அரசியல் மயமாக்குவதற்கும், பயன்படுத்துவதையும் சீனா தொடர்ந்து எதிர்ப்தாகவும் தெரிவித்த அவர் ஏனைய நாடுகளின் இறையாண்மை, அரசியல் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் உள்ள முயற்சிகளை மதிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: