இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்!

Thursday, July 14th, 2016

பொறுப்புக் கூறல் விடயத்தில் சர்வதேசத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்பிரகாரம் இலங்கை செயற்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் நேற்று(13) எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், இலங்கைக்கும், சர்வதேசத்துக்கும் இடையில் உடன்பாடுகள் இருக்கின்றன. எனவே இந்த உடன்பாடுகளுக்கு அமைய இலங்கை செயற்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் விடயத்தில் இலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையிலான உடன்படிக்கைகளில் சில பிரச்சினைகள் இருக்கின்றன.

எனினும் அவை உரியமுறையில் பின்பற்றப்படும் என்று தாம் நம்புவதாக டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்ற விசாரணைகளின்போது சர்வதேச நீதிபதிகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ள கருத்து தொடர்பிலேயே டுஜாரிக்கின் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

Related posts: