இலங்கையுடனான உறவை மேலும் வலுப்பெறச் செய்வோம் – சீனாவிலிருந்து வாழ்த்துச் செய்தி!

Wednesday, April 14th, 2021

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் ஆகிய இரு தலைவர்களும் உருவாக்கிய முக்கிய உடன்பாடுகளை வழிகாட்டலாகக் கொண்டு சீன-இலங்கை ஒத்துழைப்புக் கூட்டுறவைத் தொடர்ந்து முன்னெடுப்பதாக, சீனத் தூதுவர் கீய் ஷென்ஹோங் தெரிவித்துள்ளார்.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஓராண்டில் சீனா – இலங்கை இடையே பரஸ்பர அரசியல் நம்பிக்கை இடைவிடாமல் மேம்பட்டு வந்துள்ளதாக சீனத் தூதுவர் கீய் ஷென்ஹோங் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் மற்றும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் இரு முறை தொலைபேசியில் உரையாடியுள்ள விடயத்தை நினைவுபடுத்தியுள்ள அவர், தொலைநோக்குப் பார்வையில் சீன-இலங்கை உறவுக்கு வழிகாட்டி இரு நாட்டு ஒத்துழைப்புகள் குறித்து முக்கிய உடன்பாடுகளை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பலதரப்பு அரங்குகளில் சர்வதேசத்தின் நேர்மை மற்றும் நீதியையும் இரு தரப்புகளின் கூட்டு நலன்களையும் பேணிக்காக்கும் வகையில் பலமுறை ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஓராண்டில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து கொரோனா நோய் தொற்றை எதிர்த்து போராடியுள்ளதாகவும், இதனிடையில் இலங்கையின் பல்வேறு துறையினர்களும் அளித்த உறுதியான ஆதரவுகளை சீன மக்கள் மறக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓராண்டில் பல்வேறு துறைகளில் நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்புகளை இரு நாடுகள் முன்னெடுத்து சென்றுள்ளதாகவும், பொருளாதார வளர்ச்சியின் புதிய உந்து சக்தியாக விளங்கும் கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றின் சாதனைகள் தெளிவாகக் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதியதோர் ஆண்டில் ஒரு புதிய ஆரம்பம் இருக்குமெனவும், சீன-இலங்கை ஒத்துழைப்புக் கூட்டுறவைத் தொடர்ந்து முன்னெடுத்து மேலும் உயர் நிலைக்கு செல்லவும் மேலதிக சாதனைகளைப் பெறவும் இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்கள் பயன் அடையச் செய்யவும் தொடர்ந்து செயற்படவுள்ளதாக, சீனத் தூதுவர் கீய் ஷென்ஹோங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: