இலங்கையில் 1.1 மில்லியன் ஊழியர்கள் தொழிலிழக்கும் அபாயம் – ஒன்றிணைந்த நிறுவனங்களின் தொழிற்சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை!

Tuesday, May 26th, 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனியார் துறையில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஏற்கனவே வேலை இழந்துவிட்டார்கள் என ஒன்றிணைந்த நிறுவனங்களின் தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனியார் துறையின் ஊழியர்கள் மீது அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்றும், இந்த விவகாரத்தை அமைச்சரவையில் முன்வைக்க சம்பந்தப்பட்ட அமைச்சர் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்றும் ஒன்றிணைந்த நிறுவனங்களின் தொழிற்சங்கத்தின் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

“இப்போது, மக்கள் மீண்டும் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். ஆனால் தனியார் துறையில் வேலை செய்பவர்கள் மீது பெரும் தாக்கம் உள்ளது. இந்த நிலைமை காரணமாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல்மாதம் முதல் இந்த பிரச்சினை குறித்து பலதடவைகள் எடுத்துக்கூறியும் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை, தற்போதைய நிலைமையால் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 1.1 மில்லியன் ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றும் சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: