இலங்கையில் புதிய வைரஸ் பிறழ்வால் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலானது 15-20 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், நிலைமைகள் மோசமடையும் பட்சத்தில் இறுக்கமான தீர்மானங்களை எடுக்க நேரிடும் எனவும் சுகாதார தரப்பு மீண்டும் எச்சரிக்கை விடுக்கின்றது.
தற்போதைய புதிய வைரஸ் பிறழ்வு காரணமாக சிறுவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நிலைமைகள் குறித்த புதிய தரவுகள் தொடர்பிலும், அடுத்தகட்ட சவால்கள் குறித்தும் தெளிவுபடுத்தும் போதே அவர்கள் இதனை கூறினர்.
இது குறித்து சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்த்தன கூறுகையில் –
நாட்டில் மீண்டும் வேகமாக கொவிட் வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது, நாடு திறக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்களின் செயற்பாடுகள் பொறுப்பற்ற விதத்தில் அமைந்துள்ளமையே இதற்கு காரணமாகும்.
அதேபோல் தடுப்பூசி ஏற்றிவிட்டோம் என்ற எண்ணப்பாட்டில் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறுகின்றமை அதிகமாக அவதானிக்கப்பட்டுவரும் ஒரு காரணியாகும். தடுப்பூசி ஏற்றினாலும், எத்தனை தடவை ஏற்றிக்கொண்டாலும் அவற்றை விடவும் வைரஸின் வீரியம் அதிகமானது என்பதையே நாம் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்துக்கொண்டுள்ளோம்.
நாம் தடுப்பூசி ஏற்றிவிட்டோம் என்பதற்காக கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கப்போவதில்லை. எமது செயற்பாடுகள் காரணமாக வைரஸ் காவிச்செல்லப்பட்டு ஏனையோருக்கு பரவும் சாத்தியப்பாடுகள் அதிகமாகும். எனவே பொதுமக்கள் மிகக் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இப்போது வைரஸின் பரவல் வேகம் அதிகரித்துள்ளது.
இந்நிலைமை தொடருமாயின் மீண்டும் நாட்டை முடக்கும் நிலைமையே ஏற்படும். அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றால் மக்களின் வாழ்வாதாரமும் மோசமாக பாதிக்கப்படும். சம்பள கொடுப்பனவுகள் முதற்கொண்டு மட்டுப்படுத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படும். ஆகவே இதனை சகலரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
இதனிடையே வைரஸ் பரவல் நிலைமைகள் குறித்து காதார அமைச்சின் கொரோனா வைரஸ் பரவல் செயற்பாடுகளின் பிரதான தொடர்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி கூறுகையில் –
இலங்கை கொரோனா வைரஸ் பரவலானது 15-20 வீதத்தால் அதிகரித்துள்ளது. இறுதியாக கிடைக்கபெற்ற சுகாதார தரவுகளுக்கு அமைய யாழ்ப்பாணம், குருணாகல், அம்பாறை, பொலன்னறுவை, அநுராதபுரம், கம்பஹா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் வைரஸ் தொற்று வீதம் அதிகரித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை உடனடியாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இலங்கைக்கான புதிய வைரஸ் பிறள்வு கண்டறியப்பட்டுள்ளது. இது (B1.617.2ay.104) என அடையாளப்படுத்தப்படுவதுடன் இதன் பரவல் வேகமும் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே மக்கள் அதிக கவனமாக தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|