இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா : இன்றும் நால்வருக்கு நோய்த் தொற்று உறுதி – இலங்கையின் எண்ணிக்கை 214 ஆக பதிவு!

Monday, April 13th, 2020

இம்மாத இறுதிக்கள் கொரோனா தொற்று இலங்கையில் கட்டுப்பாட்டுக்கள் வந்துவிடும் என சுகாதார அரசாங்கத்தால் கூறப்பட்டுவரும் நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் சடுதியாக அதிகரித்து 16 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து 214 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றையதினம் ஜா எல பகுதியில் கொரொனா தொற்றாளருடன் நெருக்கமாக பழகி, சுயதனிமைப்படுத்தலை கடைப்பிடிக்காத 28 பேர் அண்மையில் ஒலுவில் கடற்படை தள தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர். அதில் 5 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்கானது தெரிய வந்தது.

இந்நிலையில் இன்றையதினம் பேருவளை தனிமைப்படுத்தல் மத்தியநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேலும் நான்’கு பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி இலங்கையில் முதலாவது கொரோனா நோய் தொற்றாளர் பதிவாகியிருந்தது. இலங்கையில் முதலாவதாக ஒரு சீனப் பெண் நோய்த்தொற்றுக்கு இலக்காகியிருந்தார். இதையடுத்து இலங்கையில் தொற்றாளர்கள் படிப்படியாக இனங்காணப்பட்ட நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 214 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா நோய் தொற்று காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். நோய் தொற்றுக்கு இலக்காகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 55 என்பதுடன், 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதேவேளை, 154 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற அடிப்படையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் இலங்கையில் கொரோனா நோயாளிகளை அடையாளம் காணுவதற்காக இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை விட இரண்டு மடங்கு மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்ட போதிலும், இன்னும் அடையாளம் காணப்படாத நோயாளிகள் எத்தனை பேர் சமூகத்திற்குள் இருப்பார்கள் என்பது தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் யாருக்காவது நோய் அறிகுறிகள் காணப்பட்டால் மறைந்திருக்காமல் சுகாதார அதிகாரிகளிடம் அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் ஒவ்வொருவரையும் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக முடிந்தளவு உதவிகளை வழங்குவதற்கு அர்ப்பணிக்குமாறும் வைத்தியர் குறிப்பிட்ட அவர் இதுவரை மக்களிடம் கிடைத்த ஆதரவு காரணமாக வெற்றிகரமாக நடவடிக்கை மேற்கொள்ள முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியினுள் நாட்டு மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட்டால் இலங்கை கொரோனா தொற்றினை முழுமையாக கட்டுப்படுத்திய உலகின் முதலாவது நாடாக இலங்கை மாறும் என பொரளை வைத்திய ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts: