இலங்கையில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாத வகையில் தடுக்கப்பட்டுள்ளது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!

Friday, May 8th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் சமூக பரவலாக மாறாத வகையில் தடுக்கப்பட்டுள்ளது. இதுவரை முன்னெடுத்த வைத்திய பரிசோதனைகளை இத்துடன் நிறுத்திக்கொள்ளாது தொடர்ந்தும் முன்னெடுப்போம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் ஆரோக்கியமான மட்டத்தை அடைந்து வருகின்றது. இவ்வாறான நிலையை அடைய நாம் கடுமையாகக் கடந்த காலங்களில் போராட வேண்டியிருந்தது.

ஏனைய நாடுகள் இன்று வரையும் கொரோனா தொற்று நோய்தாக்கத்துக்குள்ளாகி அதிலிருந்து மீள்வதில் கடும் சிரமங்களை அனுபவித்து வருகின்ற நிலையிலும் நாம் வெகு விரைவில் இந்த நெருக்கடியை சமாளித்து மக்களைப் பாதுகாத்துள்ளோம்.

குறிப்பாக மக்களிடம் வைரஸ் நெருங்காத வகையில் தடுப்பு சுவர் ஒன்றை உருவாக்கியுள்ளோம். வைரஸ் சமூக பரவலாக மாற முன்னர் அதனை எம்மால் தடுக்க முடிந்துள்ளது.

வேறு எந்த நாடுகளும் செய்யாத விடயத்தை நாம் செய்துள்ளோம் என்றால் அதற்கு எமது சுகாதார சேவையின் தரமும், அதிகாரிகள் மற்றும் மக்களின் ஈடுபாடுமே காரணமாகும்.

வைரஸ் தொற்றுநோய் பரவ ஆரம்பித்த காலம் தொடக்கம் அரசு விதித்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் மக்கள் முறையாகப் பின்பற்றி சுகாதார அறிவுரைகளைக் கையாண்ட காரணத்தால் மக்களே தம்மைப் பாதுகாத்துக் கொண்டுள்ளனர் என்றே நாம் கூறுவோம்.

எமது நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும் மக்களின் அர்ப்பணிப்பும் பொறுமையும், புத்திசாலித்தனமுமே பிரதானமாகும். இப்போது வரையில் நாம் முன்னெடுத்துள்ள வேலைத் திட்டத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளாது தொடர்ந்தும் சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

வைரஸ் தொற்றுக்கள் மக்களை நெருங்காத வகையில் விசேட வேலைத்திட்டங்களைக் கையாள வேண்டும். அதற்கான புதிய வேலைத்திட்டங்களை நாம் உருவாக்கியுள்ளோம்.

இதுவரை காலமாக 30 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதுவரை நாம் முன்னெடுத்த பரிசோதனைகளில் 3 வீதமான தொற்று நோயாளர்களே கண்டறியப்பட்டுள்ளனர்.

ஆகவே, இது ஆரோக்கியமான விடயமாகும். இந்தநிலையில் எதிர்வரும் 11 ஆம் திகதி ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.

பெரும்பாலும் ஊரடங்கு தளர்த்தப்படும்.இந்த நிலையில் மக்கள் மிகவும் அவதானமாக சுகாதார அறிவுரைகளைப் பின்பற்றி செயற்பட வேண்டும். நாம் வைரஸ் தொற்றைக் கட்டுபடுத்தி வைத்துள்ளோமே தவிர நாட்டிலிருந்து முற்றாக வைரஸ் தொய்றுநோய் நீக்கப்படவில்லை என்பதை சகலரும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

பாதிப்புக்கள் இன்னமும் தொடர்கின்றன. இன்னமும் இது குறித்த விசேட கண்காணிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும்.

பி.சி,ஆர். பரிசோதனைகள் இடம்பெறும். ஆகவே, நோய்த் தாக்கங்கள் எதுவாக இருப்பினும் மக்கள் தமக்கான பரிசோதனைகளைச் செய்தாக வேண்டும். அதுவே சமூகத்தைப் பாத்துக்க சிறந்த வழிமுறையாக அமையும்.

அதேபோல் அரசு பல கட்டுப்பாடுகளுடன் இந்த ஊரடங்கைத் தளர்க்கின்றது. அவ்வாறு இருக்கையில் மக்கள் அவை அனைத்தையும் கண்டிப்பாகப் பின்பற்றியாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: