இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களின் படகுகளை அழிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி!

Sunday, November 8th, 2020

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 121 இந்திய மீன்பிடி றோலர் படகுகளையும் அழிப்பதற்கு நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளன.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் மன்னார் மாவட்ட எல்லை மற்றும் ஊர்காவற்துறை எல்லைப் பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மாவட்ட நீரியல் வளத் திணைக்களம் ஊடாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட படகுகளில் ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 94 படகுகளும் மன்னார் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 27 படகுகளுமே இவ்வாறு அழிப்பதற்கு அல்லது ஏலத்தில் விடுவதற்கான அனுமதியினை இரு நீதிமன்றங்களும் வழங்குயுள்ளன.

இலங்கை கடற்பரப்பிற்குள் 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் ஊடுருவிய 37 படகுகள் மன்னார் நீதிமன்ற உத்தரவின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவற்றினை விடுவிக்க 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த அனுமதிக்கு அமைய இந்தியாவில் இருந்து வருகை தந்த மீனவ அமைப்புக்கள் 10 படகுகளை மட்டுமே எடுத்துச் சென்றபோதும் எஞ்சியவை அதிக பழுது எனத் தெரிவித்து கை விட்டுச் சென்றனர்.

இதேபோன்றே ஊர்காவற்துறை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் 2018 ஆம் ஆண்டுவரை தடுத்து வைக்கப்பட்ட படகுகளில் கைவிடப்பட்ட 94 படகுகளிற்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைவிட்ட படகுகள் கடற்கரையில் நீண்டகாலமாக நின்று பல பாதிப்புக்களை ஏற்படுத்துவது தொடர்பில் நீதிமன்றங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் அடிப்படையிலேயே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: