இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை !

Saturday, February 4th, 2023

75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

பாதுகாப்பு தரப்பினர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளின் வருகையை தொடர்ந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோர் வருகை தந்தனர்.

அவர்களை தொடர்ந்து 8.25 அளவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலி முகத்திடலுக்கு வருகைதந்தார். அவரை பிரதமர் உள்ளிட்ட தரப்பினர் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து ஜனாதிபதியினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அத்துடன், இலங்கையின் சுதந்திரம், தேசிய ஒருமைப்பாடு, இறைமை மற்றும் ஒற்றுமைக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

இதையடுத்து மரியாதை அணிவகுப்புகள் ஆரம்பமாகின- இலங்கை இராணுவத்தினர், கடற்படையினர் விமானப்படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து இந்த மரியாதை அணிவகுப்பை முன்னெடுத்திருந்தனர்.

விமானப்படையின் உலங்குவானுர்திகள் உள்ளிட்டவை மரியாதை அணிவகுப்பில் இணைத்து கொள்ளப்பட்டன.

இதன்படி, பெல் 412 உலங்குவானுர்திகள், பி.டி6 ரக விமானம், வைட் 12 ரக விமானங்கள், எஃப் 7 ரக தாக்குதல் ஜெட் விமானங்கள் என்பன மரியாதை அணிவகுப்பில் இணைத்து கொள்ளப்பட்டன.

முப்படையினரின் மரியாதை அணிவகுப்பை தொடர்ந்து காவல்துறையினரின் விசேட மரியாதை அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இதனையடுத்து. இராணுவத்தினரின் யுத்த தாங்கிகள் உள்ளிட்ட போர் வாகனங்களின் அணிவகுப்பு இடம்பெற்றது.

இலங்கை தரைப்படையின் 179 ஆயுத வாகனங்கள் மரியாதை அணிவகுப்பில் பயன்படுத்தப்பட்டன.

இதனை தொடர்ந்து முப்படையினர் மற்றும் காவல்துறையின் உத்தியோகத்தர்கள் 7 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பரசூட் ஊடாக தரையிறங்கிய சாகச காட்சி இடம்பெற்றது.

இறுதியாக தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு காலி முகத்திடல் சுதந்திர தின நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.

இதேவேளை, 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மாலை நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றியிருக்கவில்லை. இதன்படி, இன்று மாலை ஜனாபதி விசேட உரை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இந்த முறை சுதந்திர தின நிகழ்வுகளில் மூவாயிரத்து 284 இராணுவத்தினர், 179 யுத்த வாகனங்கள், 867 கடற்படையினர் மற்றும் அவர்களது 52 வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வான் படையின் 695 உத்தியோகத்தர்களும், 336 காவல்துறையினர் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்

அத்துடன் காவல்துறை விசேட அதிரடி படையை சேர்ந்த 220 பேரும் இன்றைய சுதந்திர நிகழ்வில் இணைந்திருந்’தனர்..

இதேவேளை, 75 ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 588 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 பேருக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 75 ஆண்டுகளில் இலங்கை அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகமாகும் என சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான உத்திகளை வகுப்பதே இந்த ஆண்டு முதன்மையான நோக்கமாகும்.

அதற்கான புதிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த திட்டத்தை நாட்டில் தற்போது முன்வைத்துள்ளோம்.

பெருமைமிகு தேசமாக இருந்த இலங்கையர்களின், கடந்த கால பலத்தை மீண்டும் மீட்டெடுத்து, நவீன தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைந்து, போட்டி நிறைந்த உலகப் பொருளாதாரத்தின் புதிய இலக்குகளை நோக்கி துரிதமாக நகர வேண்டும்.

அணிசேரா என்றபோதும் தீர்க்கமான பலமுள்ள, பின்வாங்காத, காலநிலை மாற்றத்திற்கு தீர்வு காண்பதுபோன்ற நிலையான இலட்சியங்களுடன் கூடிய புதிய வெளியுறவுக் கொள்கையை தற்போது செயல்படுத்தி வருகின்றோம்.

உலகின் அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயற்படக்கூடிய இலங்கையர் என்ற வகையில் புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: