இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சி – சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா பாராட்டு !

Thursday, January 18th, 2024

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா பாராட்டு தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடிய போது இந்த பாராட்டை தெரிவித்ததாக கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் முதல் மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு அனுமதி அளித்ததன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

இந்த அனுமதியானது இலங்கை பின்பற்றிய முக்கியமான மறுசீரமைப்புகளுக்கான அங்கீகாரம் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதார மாநாட்டுடன் இணைந்த பிரத்தியேக நிகழ்வில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அண்மைய திட்ட மதிப்பாய்வை வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் பொருளாதார மீட்சி குறித்த நம்பிக்கையான கண்ணோட்டத்தையும் வழங்கியுள்ளார்.

நெருக்கடியின் தீவிரத்தை அவர் சுட்டிக்காட்டியதுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: