இலங்கையின் சிறந்த பங்காளியாக இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை காணப்படுகிறது – இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Friday, June 11th, 2021

ஸ்திரமானதும் துரிதமானதுமான பொருளாதார வளர்ச்சி மற்றும் பகிரப்பட்ட செழுமை ஆகியவற்றை துரிதப்படுத்துவதற்கு 21 ஆம் நூற்றாண்டில் ஒரு பொருளாதார பங்குடமையை உருவாக்குவதற்கான தயார் நிலையில் இந்தியா உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இலங்கை முதலீட்டு மாநாடு 2021இல் இந்தியாவுக்கான அமர்வில் மெய்நிகர் மார்க்கம் ஊடாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் துறைமுகங்கள், கப்பல் துறை, பொருள்சார் சேவைகள், தொடர்பாடல், சக்தி/புதுப்பிக்கத்தக்க சக்தி, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல், போக்குவரத்து, சொத்து வியாபாரம், சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் போன்ற துறைகள் மீது எதிர்கால பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியான இருதரப்பு பங்குடைமை கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாக அவர் இங்கு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கையில் இந்திய முதலீடுகளின் பரந்தளவிலான நோக்கு மற்றும் இயல்பு ஆகியவை தொடர்பாக இந்த சந்தர்ப்பத்தில் தனது கருத்துக்களை தெரிவித்திருந்த உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, தனியார் துறையினரது பங்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பாகவும் சுட்டிக்காட்டியிருந்ததுடன் இருதரப்பினருக்கும் இடையிலான நீண்டகால உறவுகள், பிணைப்பு மற்றும் பரீட்சயம் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கைக்கு மிகவும் சிறந்த பங்காளியாக இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் துறை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இருதரப்பு திட்டங்களை துரிதகதியில் அமுல்படுத்துவதன் ஊடாக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதேவேளை முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் மேம்படுத்த முடியுமென்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: