இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை மாற்றப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!

Saturday, July 8th, 2023

அடுத்த தசாப்தத்தில் இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்..

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்ற, ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்திய சுற்றுலா சம்மேளன நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எல்லைகளுக்கு அப்பால் பிம்ஸ்டெக் (BIMSTEC) வலயத்தை  அபிவிருத்தியடைந்த சுற்றுலாப் பிரதேசமாக மேம்படுத்த, அனைத்து பிம்ஸ்டெக் நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அழைப்பின் பேரில் இந்திய சுற்றுலா சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு “எல்லைகளைக் கடந்து – வாழ்வை மாற்றும்” என்ற தொனிப்பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜூலை 06 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

இலங்கை பாதுகாப்பான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம் என்பதை உலகுக்கு அறிமுகப்படுத்த நடத்தப்படும் இந்த மாநாட்டில், இந்திய சுற்றுலாப் பயண முகவர் சம்மேளத்தைச் சேர்ந்த சுமார் 500 பேர் கலந்துகொண்டுள்ளன. இதில் செய்தி சேகரிப்பதற்காக சுமார் 50 இந்திய ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்தமை விசேட அம்சமாகும்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“இந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம் திருமதி. ஜோதி எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி கூற வேண்டும். புதிய திட்டங்களின் ஊடாக இலங்கையை மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுறுவேன் என நான் உறுதியளிக்கிறேன். அதற்காக எமது சுற்றுலாத்துறை அமைச்சர்  ஹரின் பெர்னாண்டோ அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்.

இந்த மாநாட்டிற்குப் பின்னர், இங்கு வருகை தந்துள்ள பலர் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வார்கள். திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்தையும், கதிர்காமக் கந்தன் சன்னதியை தரிசிக்க தவறாமல் செல்ல வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆலயம் 2000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது. வலயத்தில் மிகப் பழைமையான ஆலயமொன்றாகும். சில நாட்களுக்கு முன்னர் அங்கு சென்றிருந்தபோது பெருமளவிலான மக்கள் கூடியிருந்தனர்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் நல்லூருக்கு சென்று வருடாந்த உற்சவத்தை கண்டுகளிக்கலாம். மலைகளையும் மற்ற அழகிய இடங்களையும் நீங்கள் பார்த்திருந்தாலும், நான் இங்கு சொன்ன இடங்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

ஒகஸ்ட் மாதம் நல்லூர் திருவிழாவும் கண்டி பெரஹெராவும் நடைபெறுகின்றன. இது நமது கலாசாரத்தை உலகிற்கு எடுத்துரைக்கிறது. ஒரு சிறப்பு சுற்றுலா ஈர்ப்புள்ள  தலமாக இது திகழ்கிறது.

இலங்கை  வங்குரோத்து  நிலையில் இருந்து மீட்கும் வகையில் கடனை மறுசீரமைக்க  வேண்டும். சுற்றுலாத்துறை என்பது கடன் அல்லாத நிதியை திரட்டுவதற்கான ஒரு வழியாகும். எனவே அதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். தற்போது இலங்கைக்கு வருடாந்தம் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இதனை  5 மில்லியனாக உயர்த்துவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும். ஒரு சுற்றுலா பயணி ஒரு இரவுக்கு குறைந்தபட்சம்  1000 டொலர்களை  செலவழிக்கும் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தை உருவாக்க வேண்டும். தெற்காசிய நாடுகளில் மிகச்சிறிய மாலைத்தீவிலிருந்து சுற்றுலா பற்றி நாம் கற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள்  பல உள்ளன. நுவரெலியாவை கொல்ப் விளையாட்டின் மையமாக மாற்றுவதற்கு மேலும் 7 கொல்ப் மைதானங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தை சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம். அங்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்க விரும்பினால் அதற்கான வசதிகளை செய்துதர தயாராக உள்ளோம். அதன்படி, கிழக்கு மாகாணத்தில் உள்ள கடற்கரையின் அழகை நீங்கள் அனுபவிக்க முடியும்.

அதேபோல் ஒரு வலயமாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்கிறோம்.  கிழக்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் எமது வலயத்திற்கு எமது வலயத்தை விடவும் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அதனால் நாம் ஒன்றுபட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த தவறினால் முன்னேற்றத்தை அடைவது கடிமானமாகும்.

நீங்கள் எமது மட்டக்களப்பு பிரதேசத்திற்கு சென்றால் தனித்துவமான சுவையில் பிரியாணியை ருசிக்கலாம். நாம் அதன் விற்பனையை ஏன் பிரசித்தப்படுத்தவில்லை? தாய்லாந்து மக்கள் தங்களது உணவு வகைகளை விற்பனை செய்யும் விதத்தை பாருங்கள்.

இந்தியாவில் கூட கிடைக்காத சிக்கன் டிக்கா மசாலா வகையை தாய்லாந்து சந்தைப்படுத்துகிறது. அதனால் ஒவ்வொரு பகுதியினதும் தனித்துவத்தை பிரதிபலிக்கும் பிரியாணி வகைகளை தயார் செய்ய வேண்டும்.

எமது சுற்றுலாத்துறை மேம்பாட்டுத் திட்டங்களை தற்போது ஆரம்பிக்கும் பட்சத்தில் நாம் 10 வருடங்களுக்குள் அபிவிருத்தி அடைந்த சுற்றுலாத்துறைக்கு சொந்தக்காரர்கள் ஆக முடியும்.

கிரிக்கெட் விளையாட்டில் கவனம் செலுத்தும் போது, இந்தியா இப்போது முன்னணியில் உள்ளது. கிரிக்கெட்டில் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றுள்ள நாம் ஒன்றிணைந்து செயற்பட்டால் சுற்றுலாத்துறையிலும் ஏராளமான வெற்றிகளைப் பெறலாம். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது பிரதேசத்தை சுற்றுலாப் பிரதேசமாக மேம்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.” என ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பீத்தக்கது

000

Related posts: