இலங்கைக்கு சீனத் தூதுவர் எச்சரிக்கை விடுப்பு!

Tuesday, July 16th, 2019

இலங்கை வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷி யுவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, சீனா போன்ற நாடுகள் மேற்கத்திய சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் பொதுவான வரலாற்றைக் கொண்டவை. எனவே வெளிச் சக்திகளின் தலையீடுகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இத்தகைய தலையீடுகள், சிக்கல்கள், குழப்பங்கள் மற்றும் பேரழிவுகளைத் தருமே தவிர, ஒருபோதும் நன்மைகளைத் தர முடியாது.

சுயாதீனமான மற்றும் அமைதியான இராஜதந்திர கொள்கைகளை கடைபிடிக்கும் சீனா, ஒருபோதும் மற்றவர்களின் உள் விவகாரங்களில் தலையிடாது, அத்தகைய தலையீடுகளை கடுமையாக எதிர்க்கிறது.

நாம் எப்போதும் சுதந்திரத்தை வலியுறுத்த வேண்டும், வெளிப்புற தலையீடுகளுக்கு எதிராக போராட வேண்டும், சொந்தமாக முடிவுகளை எடுக்க வேண்டும்.

இந்த வழியில் மட்டுமே நாம் சரியான திசையை நோக்கிச் சென்று பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த வெளிச்சக்திகள், நீதி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பது என்ற போர்வையில், மற்ற நாடுகளை எப்போதும் கொடுமைப்படுத்துவதுடன், மற்றவர்களின் உள் விவகாரங்களில் தலையிடுகின்றன.

காலனித்துவ காலங்களில், அவர்கள் ஏனைய நாடுகளின் செல்வத்தை சுரண்டினர், மக்களை அடிமைப்படுத்தினர்.

புதிய யுகத்தில், பழைய மனநிலையுடன், மற்றவர்களின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்துக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: