இரண்டு வகை பசளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு – சிறுபோகத்திற்குத் தேவையான உரத்தை எதிர்வரும் 4 ஆம் திகதி விநியோகவும் நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, June 20th, 2022

இலங்கையில் இரண்டு வகையான பசளை வகைகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எப்பாவல பொஸ்பேட் படிமத்தைப் பயன்படுத்தி ட்ரிப்ள் ஸ்பெசல் பெர்டிலைசர் (டி.எஸ்.பி) மற்றும் சிங்கிள் ஸ்பெசல் பெர்டிலைசர் (எஸ்.எஸ்.பி) ஆகிய பசளை வகைகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கமத்தொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த 1979 ஆம் ஆண்டு தொடக்கம் எப்பாவல பொஸ்பேட் படிமம் பயன்படுத்தப்படாமல் வெறுமனே கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. ஆனால் உரிய முறையில் பயன்படுத்தப்பட்டால் அண்ணளவாக 60 மில்லியன் தொன் பசளை தயாரித்துக் கொள்ள முடியும்.

எனவே பொஸ்பேட் படிமத்தைப் பயன்படுத்தி ட்ரிப்ள் ஸ்பெசல் பெர்டிலைசர் (டி.எஸ்.பி) மற்றும் சிங்கிள் ஸ்பெசல் பெர்டிலைசர் (எஸ்.எஸ்.பி) ஆகிய பசளை வகைகளை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றது. தற்போதைக்கு இந்தப் பசளை வகைகளை இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் 06 பில்லியன் டொலர்கள் செலவிடப்படுகின்றது.

எந்தவொரு முதலீட்டாளரும் அதற்காக முதலீடு செய்வதற்கு முன்வரலாம். தற்போதைக்கு சிலர் முன்வந்துள்ளார்கள்.

எனினும் அவர்களின் உற்பத்தித்திறன் தொடர்பில் அரசாங்கத்துக்கு நம்பிக்கை ஏற்படுவதற்காக குறைந்த பட்சம் 20 மில்லியன் டொலர் வைப்பொன்றை அவர்கள் வைப்பிலிட வேண்டும் என்றும் அமைச்சர் அமரவீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

சிறுபோகத்திற்குத் தேவையான உரம் எதிர்வரும் 4 ஆம் திகதி விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இவற்றை விரைவாக விவசாயிகளுக்கு கையளிப்பதே நோக்கமாகும். இதன் பின்னர் ஒவ்வொரு போகத்திற்கும் தேவையான உரத்தை உரிய காலப்பகுதியில் வழங்குவது தொடர்பில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: