இன்றுமுதல் விசேட விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

Sunday, May 3rd, 2020

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இன்றுமுதல் விசேட விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரித்தானியா  மற்றும் அவுஸ்திரேலியாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான UL 503 எனும் விசேட விமானம், இன்று அதிகாலை 4.40 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, இலண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை இன்று முற்பகல் 11.25 மணியளவில் நிலையத்தைச் சென்றடைந்துள்ளது.

இவ்விமானத்தில் விமான சேவை பணியாளர்கள் மாத்திரம் பயணித்துள்ளனர். குறித்த விமானம் நாளை அதிகாலை 12.45 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாகவும் இதில் இலங்கை மாணவர்கள் சுமார் 250 பேர் அழைத்துவரப்படவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, நாளை மற்றும் நாளைமறுதினம் இலண்டன் நகருக்கு மேலும் இரண்டு விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன் அவுஸ்திரேலியாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக எதிர்வரும் 08ஆம் திகதி விசேட விமானம் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: