இன்றுமுதல் நடைமுறையானது திருத்தப்பட்ட தொடருந்து கட்டணம் – இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள், திங்கள்முதல் வழமைபோன்று சேவையில் ஈடுபடும் எனவும் அறிவிப்பு!

Saturday, July 23rd, 2022

இன்றுமுதல் திருத்தப்பட்ட தொடருந்து கட்டணம் அமுலாவதாக, தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், சில பிரச்சினைகள் காரணமாக, தொடருந்து கட்டண திருத்தத்தை அமுலாக்க முடியாது என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய கட்டண திருத்தத்துக்கு அமைய, 10 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த கட்டணம், 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் வகுப்புக்கான ஆகக்குறைந்த கட்டணம், 50 ரூபாவாகவும், முதலாம் வகுப்புக்கான ஆகக்குறைந்த கட்டணம் 100 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை மூன்றாம் வகுப்புக்காக, முதல் 10 கிலோமீற்றர்களுக்குள், ஒரு கிலோமீற்றருக்கு, 2 ரூபா 60 சதமும், இரண்டாம் வகுப்புக்காக 5 ரூபா 20 சதமும், முதலாம் வகுப்புக்காக, 10 ரூபா 40 சதமும் என தொடந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டண உயர்வை, இன்றுமுதல் தொடருந்து நிலையங்களில் காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், போக்குவரத்து அமைச்சு தீர்மானித்ததன் அடிப்படையில், இன்றுமுதல் தொடருந்து கட்டணத்தை அதிகரிக்க முடியாது என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடருந்து கட்டண அதிகரிப்பை எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் அமுலாக்க தயார் என அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.  இந்த கட்டண உயர்வில் உள்ள குறைபாடுகள் இதுவரையில் நிவர்த்தி செய்யப்படவில்லை.

எனவே, இன்றையதினம்முதல் குறித்த காலப்பகுதி வரையில், பழைய கட்டணத்தின் அடிப்படையில், தொடருந்து பயணச் சீட்டுக்களை விநியோகிக்குமாறு தமது சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள், எதிர்வரும் திங்கட்கிழமைமுதல், வழமைபோன்று சேவையில் ஈடுபடும் என அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வடக்கு மாகாணசபையின் ஆழுமையற்ற செயற்பாடுகளே தமிழ் மாணவா்களது கல்வி வீழ்ச்சிக்கு காரணம் -  ஈ.பி.டி.பிய...
யாழ்ப்பாணத்தில் அனைத்து வியாபார நிலையங்களையும் இரவு 10 மணிவரை திறந்திருக்க ஜனாதிபதி கோட்டாபய உத்தரவ...
புதிய சுற்றாடல் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி - ஒரு இலட்சம் ரூபா வரை அபராத தொகை அதிகரிக்கும் என சுற்...