இன்றுமுதல் எதிர்வரும் 13 ஆம் திகதிவரை வடமாகாணத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு – விவசாயிகள் களைநாசினி மற்றும் உரமிடுதல் செயற்பாடுகளை தவிர்ப்பது நல்லது எனவும் அறிவிப்பு!

Monday, November 8th, 2021

வடமாகாணத்தில் இன்று திங்கட்கிழமைமுதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக கூறியிருக்கும், யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபராஜா, கடற்பகுதி கொந்தளிப்பாக இருக்கும் எனவும் மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது எனவும் எச்சரித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது –

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்று ஒருங்கிணைவு காரணமாக இன்றுமுதல் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் இடியுடன் கூடிய கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது.

அதேவேளை வங்காள விரிகுடா கடற்பகுதியின் தென்கிழக்கு பகுதியில் தோன்றியுள்ள தாழமுக்கம் காரணமாக இன்று திங்கட்கிழமை பிற்பகலுக்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்க வாய்ப்புள்ளது.  இது எதிர்வரும் 13 ஆம் திகதிவரை தொடரும்.

அத்துடன் எதிர்வரும் 09 ஆம் திகதிமுதல் தாழமுக்கம் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.

இதேவேளை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் களைநாசினி விசிறுதல் மற்றும் உரமிடுதல் செயற்பாடுகளை எதிர்வரும் 13ஆம் திகதிவரை தவிர்ப்பது நல்லது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

00

Related posts: