இந்தோனேசியாவில் சுனாமி: சில நிமிடத்தில் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியெடுப்பு – பல நாடகளில் அஞ்சலிப் பிரார்த்தனை!
Wednesday, December 26th, 20182004 இண்டு டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்ப்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்டு உயிர்நீத்த உறவுகளின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. இந்நினைவுதினத்தையொட்டி இன்று வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் சுனாமியால் உயிரிழந்த உறவுகளின் வாழும் உறவுகள் அஞ்சலிமரியாதை செலுத்தியிருந்தனர்.
இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோரை நினைவு கூர்ந்து நாடு முழுவதிலும் இன்று அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி என்பது உலக மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திவிட்ட நாளாகும்.
இந்தோனேசியாவில் சுமத்திரா தீவின் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எழும்பிய ஆழிப்பேரலைகள் இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளின் கரையோரப் பிரதேசங்களைத் தாக்கி ஒரு சொற்ப நேரத்துக்குள்ளேயே 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் காவுகொண்டதோடு கோடிக்கணக்கான உடமைகளையும் அழித்தன.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் 30 கிலோமீற்றர் ஆழத்தில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிச்டர் அளவில் 9.1 என்ற அளவுக்கு அது பதிவானது. இதையடுத்து கடலில் எழும்பிய ஆழி பேரலைகள் இந்தோனேசியா, இந்தியா, மியான்மார், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கடும் உயிர் மற்றும் பொருள் சேதத்தை ஏற்படுத்தின.
இந்தப் பேரிடரில் சிக்கி 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பரிதாபகரமாக உயிரிழந்தனர். 20 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.
இது உலகின் மோசமான இயற்கை சீரழிவுகளில் 6ஆவது இடம் என்ற சோக சாதனையை பெற்றது. உயிர் சேதத்துடன், கோடிக்கணக்கான ரூபாவுக்கு பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியது. ஆழிப்பேரலை அனர்த்தத்தால் இலங்கையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
வடக்கில் யாழ். மாவட்டத்தின் வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சி கிழக்குப் பிரதேசங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரம் உள்ளிட்ட கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவும், கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களும், தெற்கில் அம்பாந்தோட்டை, காலி மாவட்டங்களும் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் மிக மோசமான உயிரழிவுகளையும், சொத்தழிவுகளையும் சந்தித்த இடங்களாக பதிவாகியுள்ளன.
சுனாமி எனும் ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் 14 ஆண்டுகள் கடந்து விட்டாலும் அந்தப் பேரவலம் ஏற்படுத்தி விட்ட வலிகளிலிருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை.
அதற்கு, ஆண்டுதோறும் ஆழிப்பேரலை நினைவுநாளில் அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்டவர்களின் கல்லறைகளுக்கு அவர்களின் உறவுகள் சுடர் ஏற்றுகின்றபோது கதறியழுது கண்ணீர் வடிக்கும் காட்சி சான்று பகர்கின்றது.
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்படுத்திவிட்ட வலிகளும், வடுக்களும் அந்த மக்களின் மனங்களிலிருந்து என்றுமே அகலப்போவதில்லை.
Related posts:
|
|