இந்து சமுத்திர வலய பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் அனைத்து தரப்பினரும் சாதகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க வலியுறுத்து!

Thursday, June 8th, 2023

இந்து சமுத்திர இந்து சமுத்திர வலயத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து பங்குதாரர்களும் சாதகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற 20 ஆவது ஷங்ரிலா உரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.

ஆசியாவின் பிரதான பாதுகாப்பு மாநாடுகளில் ஒன்றான Shangri-La Dialogue  சிங்கப்பூரில் ஜூன் 2 ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் ஆவுஸ்திரேலியப் பிரதமர் அன்டனி அல்பனீஸ் தலைமையுரை ஆற்றியதோடு இந்தியா, ஓமான், பிரான்ஸ், பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

நிலையான மற்றும் சமநிலையான ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குதல், பிராந்திய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, ஆசியாவில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல், இந்து-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான புவிசார் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இந்த உச்சிமாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, ஷங்ரிலா உரையாடலில் கலந்துகொண்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாளர் கிரெக் மொரியாட், அமெரிக்காவின் இந்து-பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஜோன் அக்விலினோ, இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விக்ரம் மிசிறி, உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ் ஆகியோருடன் விசேட சந்திப்புக்களை நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: