இந்திய ரிஷவ் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தியது இலங்கை!

Saturday, February 6th, 2021

இந்திய ரிஷவ் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகையை இலங்கை திருப்பி செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய ரிஷவ் வங்கியிடமிருந்து, இலங்கை 400 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றுக்கொண்டிருந்தது. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகையை செலுத்துவதற்கான காலம் 2ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

இந்த நிலையிலேயே இலங்கை கடனை மீள செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

முன்பதாக பரிவர்த்தனை நிதியிலிருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியா இணங்கியுள்ளதாக கடந்த வருடம் ஜூலை மாதம் 25 ஆம் திகதி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அத்துடன் குறித்த இந்த கடன் சலுகை 2022 ஆம் ஆண்டு நவம்பர்வரை இருக்கும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், இந்த 400 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை மீள செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று அறிவித்தது.

400 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துவதற்கு மூன்று மாத காலத்தை வழங்குமாறு ஜூலை மாதம் இலங்கை மத்திய வங்கி இந்தியாவின் இந்திய ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

அந்த மூன்று மாத காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டது.

அத்துடன் குறித்த கடனை மேலும் நீடிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்டத்தில் இலங்கை இணக்கப்பாட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் இதுவரை அவ்வாறான இணக்கப்பாடு எட்டப்படவில்லையெனவும் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: