இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் வியாபார நிலையமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, December 4th, 2021

நாட்டில் 2023 இல் புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சு பொது பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட பல செலவினத் தலைப்புகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் சமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் சைபர் துறை பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க சைபர் துறை பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று கபீர் விமானங்களின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவும் போதைப்பொருள் கடத்தலை முறியடிக்கவும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடற்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெருமளவு போதைப் பொருட்கள் கடந்த காலத்தில் பிடிபட்டன. புலனாய்வு பிரிவினால் அடையாளங் காணப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்கள் மேற்கொள்ளும் குழுக்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் பிரிவினைவாத யுத்தத்தை நிறைவு செய்ய பங்களித்த படையினரின் நலனுக்கு பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2020 மார்ச் மாதம்முதல் எமது நாட்டில் முக்கிய பிரச்சினையாக கோவிட் தொற்று மாறியது. இதில் முப்படை முக்கிய பங்காற்றியது. 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இராணுவம் தடுப்பூசி வழங்கியது.

அதேபோன்று எல்லை நிர்ணய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை 6 மாதங்களில் கிடைக்க இருக்கிறது. நிர்வாக மற்றும் சமூக ரீதியில் முக்கியமான கிராம சேவகர் பிரிவுகளை இதன் வாயிலாக நிர்ணயிக்க முடியும்.

அத்துடன் இலத்திரனியல் கிராம சேவகர் சேவையை அனைத்தது கிராம சேவகர் பிரிவுகளிலும் முன்னெடுக்க இருக்கிறோம். மக்களுக்கு அவசியமாக 23 சான்றிதழ்களை ஒன்லைன் ஊடாக பெறவசதி அளிக்க இருக்கிறோம்.

இந்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் வியாபார நிலையமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் கிராம சேவகர் யாப்பை மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்..

மேலும் அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டன. அனர்த்தங்கள் நடைபெறும் இடங்களை முன்கூட்டி கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கீழ் இலத்திரனியல் கடவுச்சீட்டொன்றை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இதற்கு அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் 2023 இல் புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்படும். கடவுச் சீட்டுகளை புதுப்பிப்பதற்காக ஒன்லைன் முறையின் கீழ் விண்ணப்பிக்கும் திட்டம் இம்மாத இறுதிக்குள் அறிமுக செய்யப்படும். பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் கீழ் மோசடிகள் இடம்பெறுவதை தடுக்க விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று 2022 முதல் சகல பிரதேச செயலகங்களிலிலும் பிறந்தது முதல் குழந்தையின் அனைத்து தகவல்களும் உள்ளடக்கிய தேசிய பிறப்புச்சான்றிதழ் திரட்டி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஒன்லைன் ஊடக பிறப்பு இறப்பு சான்றிதழ்களை வீடுகளுக்கு அனுப்பும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: