இந்தியாவிலிருந்து 20 இலட்சம் முட்டைகளுடன் இலங்கை வரும் விசேட கப்பல்!

Saturday, February 25th, 2023

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20 இலட்சம் முட்டைகளை தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளது.

உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளமைக்கு தீர்வு காணும் பொருட்டு இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று காலை இந்தியாவில் இருந்து புறப்பட உள்ள குறித்த கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடைய உள்ளது.

இந்த நிலையில், கருத்து வெளியிட்டுள்ள அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, மூலப்பொருட்களின் விலையை குறைத்தால், தங்களுக்கு முட்டையின் விலையை 25 ரூபாவுக்கு நிர்ணயம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

உண்மையில், இதற்கு 2, 3 மாதங்களுக்கு முன்னர் முட்டையை இறக்குமதி செய்திருக்கலாம். தற்போது நாட்டில் 30 இலட்சம் முட்டை உற்பத்தி செய்யப்படுவதுடன், 85 வீத முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதாகக் கூறியே, அமைச்சர் முட்டையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

எனினும், இலங்கையில் வெதுப்பகத்திற்கு கூட முட்டையை கொள்வனவு செய்ய சம்பந்தப்பட்டத் தரப்பினர் மறுத்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முட்டை இறக்குமதியின் மூலம், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: