இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பிலான ஒப்பந்தங்களை நிறைவுசெய்வதற்கு நிதியமைச்சர் பஷில் மீண்டும் இந்தியா பணயம் – வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு!

Monday, February 14th, 2022

இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பிலான ஒப்பந்தங்களை நிறைவுசெய்வதற்கு  நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் வாரமளவில் மீண்டும் இந்தியாவிற்கு செல்லவுள்ளார் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயம் இலங்கைக்கு பயனுடையதாக காணப்படுகிறது.

இலங்கைக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது. இந்தியாவிடமிருந்து கடன்பெறலுக்கான வழிமுறைகளை நிதியமைச்சர் செயற்படுத்தியுள்ளார்.

அத்தியாவசிய உணவு பொருட்கள், மருந்து வகைகள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு இலங்கை இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலில் கடனாக பெறும்.

இந்நிலையில் இந்தியாவிடமிருந்து பெறப்படும் நிதியுதவி தொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் வாரமளவில் மீண்டும் புதுடில்லிக்கு செல்லவுள்ளார்.

இந்தியாவிடமிருந்து எரிபொருட்களை இறக்குமி செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் கடந்த 2 ஆம் திகதி  கைச்சாத்திடப்பட்டது.

இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் கடனை இம்மாதத்தின் இறுதி பகுதியில் அல்லது எதிர்வரும் மாதத்தின் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

000

Related posts: